TNPSC Thervupettagam

அவசியமான 'உத்வேகம்'

October 20 , 2021 941 days 1422 0
  • ஆகஸ்ட் மாத சுதந்திர தின உரையின்போது அறிவித்திருந்த, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான "உத்வேகம்' (கதி சக்தி) திட்டத்தை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • ரூ.100 லட்சம் கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் "உத்வேகம்' திட்டம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான முனைப்பு என்று கூறலாம்.
  • ரயில்வே, சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள் உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்களை தொழில்நுட்பம், செயற்கைக்கோள் படங்கள், தரவுத் தொகுப்புகள் ஆகியவற்றின் மூலம் இணைத்து, அனைத்து கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்துவதுதான் "உத்வேகம்' திட்டத்தின் நோக்கம்.
  • சரக்குப் போக்குவரத்துக்கான செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 13% ஆக இருக்கிறது. அதனால் மற்ற நாடுகளுடன் ஏற்றுமதியில் போட்டியிடும் திறன் குறைகிறது.
  • சரக்குப் போக்குவரத்துக்கான செலவையும் நேரத்தையும் "உத்வேகம்' திட்டத்தின் மூலம் குறைப்பதுதான் இலக்கு.
  • அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டமும் குறித்த நேரத்தில் நிறைவு பெறாமல் இருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை.
  • அதனால் ஆண்டுதோறும் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறது. குறிப்பாக, கட்டமைப்புப் பணிகளின் காலதாமதத்தால் மிகப்பெரிய இழப்பை நாடு எதிர்கொள்கிறது.

கதி சக்தி திட்டம்

  • தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணி பல ஆண்டுகளாகியும் முடிவடையாமல் அரைகுறையாக நிற்கிறது.
  • 2018 ஜூன் 3-ஆம் தேதி மும்பையிலுள்ள அந்தேரி மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்தது.
  • ரயில்வேக்கும் பெருநகர் மாநகராட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அது சீரமைக்கப்படாமல் தொடர்கிறது. தில்லி - மீரட் விரைவுப் பாதை, ரயில்வே மேம்பாலத்துக்கான அனுமதி ரயில்வே துறையிடமிருந்து கிடைக்காததால் 13 மாதங்களாக நிறைவடையாமல் இருக்கிறது.
  • இதேபோல, இந்தியாவின் ஊரகப்புறங்களிலும், மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் குறித்த நேரத்தில் நிறைவடையாமலும், அரைகுறையாக விடப்பட்டும் பல கட்டமைப்புப் பணிகள் காணப்படுகின்றன.
  • ஜூன் 2021 நிலவரப்படி, அறிவிக்கப்பட்ட 1,779 மெகா திட்டங்களில் 559 திட்டங்கள் காலதாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 967 திட்டங்களில் பணி முடிக்க வேண்டிய காலக்கெடு குறித்த எந்தவித விவரமும் இல்லை.
  • இவற்றின் காலதாமதத்தால் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட சுமார் ரூ. 4.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு கூடியிருக்கிறது.
  • குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை பிரதமரின் "உத்வேகம்' திட்டம் குறித்த அறிக்கை விளக்கமாகவே பதிவு செய்கிறது. உதாரணமாக, மும்பையின் நவசேவா துறைமுகத்தின் நான்காவது முனையம் ரூ.5,000 கோடி செலவில் 2017-இல் நிறைவுற்றது.
  • நான்கு ஆண்டுகள் கழிந்தும் பாதி அளவுகூட நான்காவது முனையம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது "உத்வேகம்' திட்ட அறிக்கை.
  • கப்பலில் இருந்து சரக்குகளைக் கையாளும் "கேரேஜ் வே' முழுமையாக நிறுவப்படாததால் ஏற்பட்டிருக்கும் குறைபாடுதான் அதற்கு காரணம். போதிய சாலை, ரயில் தொடர்பு உறுதிப்படாததால் கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டை 30% அளவில்தான் செயல்படுகிறது.
  • பிரதமரின் "உத்வேகம்' திட்டம் இரண்டு தளங்களில் செயல்பட இருக்கிறது. அடிப்படை அளவில் 16 அமைச்சகங்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதன் மூலம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும், ஒருங்கிணைப்பின் மூலம் கால விரயம் குறைவதையும் உறுதிப்படுத்துகிறது.
  • அதேபோல, திட்டத்தின் செயல்பாட்டுக்கான அனைத்துத் தரவுகளும் கிடைப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
  • பொருளாதாரத் தளத்தில் "உத்வேகம்' திட்டத்தின் முனைப்பு போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது. தரமான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை.
  • அதனால் நெடுஞ்சாலைகள், ரயில், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பதும், விரைவுபடுத்துவதும் "உத்வேகம்' திட்டத்தின் நோக்கம்.
  • எந்தவொரு பொருளாதாரத் தேக்கத்துக்கும், பின்னடைவுக்கும் பிறகு செயல்பாடுகளை மீட்டெடுக்க, கட்டமைப்புத் திட்டங்களில் அரசு முதலீடு செய்வது உலகெங்கும் காணப்படும் வழக்கம்.
  • கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிப்பதும், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதும் சாத்தியமாகிறது.
  • கட்டமைப்புத் திட்டங்களில் அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஜிடிபி-யில் ரூ.2.50 முதல் ரூ.3.50 வரையிலான அளவில் பயனளிக்கும்.
  • அதிகாரபூர்வ புள்ளிவிவரத்தின்படி, 483 கட்டமைப்புத் திட்டங்களின் காலதாமதத்தால் அதிகரித்திருக்கும் செலவு மட்டுமே ரூ.4.43 லட்சம் கோடி. அதனால் "உத்வேகம்' முயற்சி அவசியமாகிறது.
  • அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த, தடையில்லாத மின்சாரம், தேவையான தண்ணீர் வசதி, சாலைகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்டவையும் உறுதிப்படும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும்.
  • இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமின்மைக்கு, திட்டங்களின் காலதாமதம்தான் மிகப்பெரிய காரணம் என்பதால் "உத்வேகம்' மூலம் அதை எதிர்கொள்ள நரேந்திர மோடி அரசு எடுத்திருப்பது சரியான முனைப்பு. அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (20 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories