TNPSC Thervupettagam

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி குறித்த தலையங்கம்

February 10 , 2022 815 days 521 0
  • இந்திய - ரஷிய கூட்டு முயற்சியான "பிரமோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறது.
  • ஒலியைவிட அதிவேகத்தில் பயணிக்கக்கூடிய பிரமோஸ், தரையிலிருந்து மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏவக்கூடிய திறன் பெற்றது.
  • 400 கி.மீ. தொலைவு இலக்குவரை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகள், 2020 செப்டம்பரில் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டன. ரூ.2,800 கோடிக்கு பிலிப்பின்ஸ் கடற்படை, இந்தியாவில் உற்பத்தியாகும் அந்த ஏவுகணைகளை வாங்க இருக்கிறது.
  • இந்துமகா கடல் பகுதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே மோரீஷஸ், செஷல்ஸ் நாடுகளின் பாதுகாப்புக்கு துணை நிற்கிறது. இந்துமகா கடலின் மேற்குப் பகுதியில் உள்ள மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பாதுகாப்பு உதவியைப் பெறுகின்றன.
  • கிழக்குப் பகுதியில் தென்சீனக் கடலில் சீனாவுடன் பிரச்னைகள் உள்ள ஆசியான் நாடுகளும் கூட இந்தியாவின் பாதுகாப்பு உறவை விரும்புகின்றன.
  • ஆசியான் நாடுகளுடன் பொதுவான நட்புறவும், அந்த அமைப்பில் உள்ள ஆறு நாடுகளுடன் கடல் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தமும் ஏற்கெனவே இந்தியாவுக்கு இருக்கின்றன.
  • ஆசியான் நாடுகளும் சரி, இந்தியாவும் சரி வெளிப்படையான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை மேற்கொள்ள விரும்பாததால், கூட்டுறவுடன் நின்றுவிட்டன.

வலிமையின் வெளிப்பாடு

  • தென்சீனக் கடலையொட்டிய சில நாடுகள் அவற்றின் கடல் எல்லையையொட்டிய தீவுகளை சீனாவிடம் இழந்து கொண்டிருக்கின்றன.
  • சீனாவின் கடலோரக் காவல் படையின் துணையுடன், சீன மீன்பிடி கப்பல்கள் அண்டை நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது.
  • சீனாவின் 2021 சட்டம், அது தனக்குத் தானே வகுத்துக் கொண்டிருக்கும் எல்லையை உறுதிப்படுத்துவதால், பல பிரச்னைக்குரிய அண்டை நாட்டுத் தீவுகளை சொந்தம் கொண்டாடுகிறது.
  • குறிப்பாக, வியத்நாமும் பிலிப்பின்ஸும் சீன கடற்படையின் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
  • அதனால், தங்களது பாதுகாப்புக்காக சில நாடுகள் இந்தியாவை நாட வைத்திருக்கின்றன.
  • 2020-இல் மியான்மருக்கு இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வழங்கியது. இந்தியாவின் அண்டை நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த "சாகர்' திட்டத்தின் அடிப்படையில் உதவிகள் செய்து வருகிறது.
  • வியத்நாம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் தங்களது கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கு இந்தியாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றன.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆகாஷ், அஸ்த்ரா, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ரேடார்கள், ஏவுகணைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
  • கடந்த ஆண்டு வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் டிஆர்டிஓ முனைப்பு காட்டியது.
  • இப்போது ஐந்து பில்லியன் டாலர் (சுமார் ரூ.37,416 கோடி) இலக்கு நிர்ணயித்து ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதன் விளைவு தான் பிலிப்பின்ஸுடனான பிரமோஸ் ஒப்பந்தம்.
  • வியத்நாமும் இந்தோனேசியாவும் ஏற்கெனவே தயாராக இருந்த நிலையில், அவற்றை முந்திக் கொண்டு பிலிப்பின்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது ஆச்சரியப்படுத்துகிறது.
  • தென்னாப்பிரிக்கா, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட ஏனைய பல நாடுகளும் பிரமோஸ் ஏவுகணைகளைப் பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றன.
  • இந்துமகா கடலின் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்த நாடுகள் எதுவுமே நேரடியாக சீனாவால் பாதிக்கப்படாதவை என்பதையும், வியத்நாம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகள் சீனாவுடன் பிரச்னைகள் உள்ள நாடுகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • தொடர்ந்து பிரமோஸ் உற்பத்தியும், ஏற்றுமதியும் நடைபெற மூன்று பிரச்னைகளை டிஆர்டிஓ எதிர்கொள்ளக் கூடும். முதலாவது பிரச்னை, மின்கலத்துக்கான 2.75 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20,579 கோடி) செலவு.
  • சிறிய நாடுகளால் அந்த அளவிலான முதலீடு சாத்தியமா என்பது தெரியவில்லை. இரண்டாவது பிரச்னை, பிரமோஸ் ஏவுகணை இந்திய - ரஷிய கூட்டுறவு முயற்சி.
  • இந்தியாவின் பிரமோஸ் ஏற்றுமதிக்கு ரஷியா தடையாக இல்லை. அதே நேரத்தில், ரஷியா கூட்டுறவுடனான ஏவுகணையை இந்தியா ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.
  • மூன்றாவது பிரச்னை, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வட கிழக்கு ஆசியாவில் சீன - ரஷிய கூட்டணி ஏற்பட்டிருக்கிறது.
  • தென்சீனக் கடலில் ரஷியாவுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும்கூட, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான்.
  • இதுவரை பிரமோஸ் விற்பனை குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை. ரஷியாவின் உதவியுடன் முட்டுக்கட்டைபோட முயற்சித்தால் வியப்படையத் தேவையில்லை.
  • இந்தியாவின் தளவாட உற்பத்தி புது பரிமாணத்தைக் காண்கிறது. 2016-இல் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்ததன் மூலம், 300 கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக செலுத்தக்கூடிய ஏவுகணைகளை தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
  • லடாக், அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியின் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரமோஸ் ஏவுகணைகள் இனிமேல் கடல் கடந்து பல நாடுகளின் பாதுகாப்புக்குப் பயன்படப் போகிறது.

நன்றி: தினமணி (10 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories