TNPSC Thervupettagam

ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விதிமுறைகள் பாதுகாப்பை மேம்படுத்தட்டும்

July 6 , 2021 1042 days 429 0
  • ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை முடித்து, அங்கு நடத்தப் படும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே நிரந்தர ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும்.
  • ஒன்றியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக அறிவிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
  • ஓட்டுநர் உரிமம் பெறுவதில் மண்டலப் போக்குவரத்து அலுவலகங்களை மையமாக வைத்து, ஒரு சில இடங்களில் இயங்கிவந்த இடைத்தரகர் முறைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, விபத்துகளைக் குறைக்கவும் பாதுகாப்பான பயணங்களை உறுதிசெய்யவும் ஓட்டுநர் பயிற்சியை மேம்படுத்த வேண்டிய காலத்தின் தேவையையும் கருத்தில் கொண்டுள்ளது.
  • ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை தகுதியான பயிற்சியாளர்கள் இருந்த போதிலும் பெரும்பாலானவை பயிற்சிகளுக்கான பிரத்யேக சோதனைச் சாலைகள் இல்லாதவையாகவே இருந்துவருகின்றன.
  • இதற்கு அவை நகரங்களின் மையப் பகுதிகளில் அமைந்திருப்பதும் ஒரு முக்கியக் காரணம்.
  • தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பாகக் கொள்ளலாம்.
  • அதே நேரத்தில், ஏற்கெனவே பயிற்சிப் பள்ளிகளை நடத்திவருபவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முன்னுரிமையும் முதலீட்டுக் கடன் வாய்ப்புகளையும் வழங்கிட வேண்டும்.
  • ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் முறை, இணையவழித் தேர்வுகள் ஆகியவை நம்பிக்கையளிக்கின்றன என்றபோதும் முழுமையான பயிற்சியை முடித்தவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் அளிக்கப் படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.
  • பயிற்சி மையங்களை வழக்கமாகவும் அவ்வப்போது எதிர்பாராத வகையிலும் சோதனைகள் மற்றும் தணிக்கை செய்வதற்கான விதிமுறைகளும் உருவாக்கப் பட்டுள்ளன என்றபோதும் நடைமுறையிலும் அவை செயல்வடிவம் பெற வேண்டும்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாட்டின் மிகச் சிறந்த சாலைக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று.
  • சுமார் 66,000 கிமீ தொலைவிலான சாலைகள், மூன்று கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப் பட்ட வாகனங்கள், ஏறக்குறைய இரண்டு கோடி ஓட்டுநர் உரிமங்கள் என்ற கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் இது.
  • போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடிப்பதிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கிவருகிறது.
  • விபத்துகளைக் குறைப்பதில் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியே பரிந்துரைத்திருக்கிறார்.
  • மதுபோதையில் வாகனம் ஓட்டியது, வாகனம் ஓட்டிக்கொண்டே செல்பேசியில் பேசியது, சிவப்பு விளக்குகளைக் கடந்தது உள்ளிட்ட விதி மீறல்களுக்காகக் கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
  • நெடுஞ்சாலை ஓரங்களில் நடத்தப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதும் விபத்துகளைக் குறைப்பதில் முக்கியக் காரணமாக அமைந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது.
  • தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விதிமுறைகள் பாதுகாப்பான பயணங்களுக்கான அடுத்த பரிணாமமாக அமையட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories