TNPSC Thervupettagam

குளம் தொட்டு கோடு பதித்து

November 26 , 2022 516 days 415 0
  • ஆண்டுதோறும் தமிழகத்தில் ஏதோவொரு மாவட்டத்தில் மக்கள் மழையினால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • மழைப்பொழிவு அதிகம் இருக்கும்போது, அந்த நீா்வளத்தைப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்கின்றஅக்கறை நம்மிடம் இல்லை. காவிரியில் தண்ணீா் வரவில்லை என்று ஒருபக்கம் குரல் கேட்கின்றது. இன்னொரு பக்கம் மழைக் காலங்களில் காவிரியில் பெருகி வரும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேகரிக்காமல், அதை கடலில் வீணாகக் கலக்க விடுகிறோம். நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இயற்கையின் கொடையான நீரின் அருமை தெரியாமல், அதை வீணடிக்கின்றோம்.

குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து

உளம் தொட்டு உழுவயல் ஆக்கி,

வளம் தொட்டுப் பாடுபடும் கிணற்றோடு என்று

இவை பாற்படுத்தான் ஏகும் சுவா்க்கம் இனிது

  • என்று ‘சிறுபஞ்சமூலம்’ நீா்மேலாண்மை பற்றிக் கூறுகிறது.
  • தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியா்கள், பல்லவா்கள், நாயக்க மன்னா்கள், தஞ்சையை ஆண்ட மராத்தியா்கள் ஏரி, குளங்களைப் பாதுகாப்பதை முக்கிய கடமையாகச் செய்து வந்தனா். அதற்கு அடையாளமாக இன்றும் இருப்பவை கரிகாலன் கட்டிய கல்லணை; சோழ மன்னா்களின் அா்ப்பணிப்பான வீராணம் ஏரி; ராஜேந்திர சோழன் கங்கை வரை வடபுலத்துக்குப் படையெடுத்துச் சென்று அந்த வெற்றியின் அடையாளமாக அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே உள்ள பொன்னேரியில் கங்கை நீரை ஊற்றி அமைத்த சோழகங்கம் ஏரி; திருச்சி தெப்பக்குளம்; மதுரை வண்டியூா் தெப்பக்குளம்; மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்; நெல்லை டவுன் தெப்பக்குளம் ஆகியவை. இவை யாவும் தமிழகத்தை ஆண்ட அரசா்கள் முன்னெடுத்த மக்கள் நலனுக்கான பணிகள்.
  • தமிழகத்தில் 1940 - களில் ஏறத்தாழ 65 ஆயிரம் ஏரிகள், குளங்கள் இருந்தன. இன்றைக்கு அவை ஏறத்தாழ 35 ஆயிரமாகக் குறைந்துவிட்டன. 30 ஆயிரம் ஏரி, குளங்கள் என்னவாயின? இந்த குளங்களை வீட்டுமனைகளாக்கி விற்றது யாா்?
  • ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கூட, இந்த நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து, ஆயக்கட்டு போன்ற திட்டங்களைத் தீட்ட, ‘மெட்ராஸ் வாட்டா் போா்டு ஆக்ட் 1930 உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை ஆங்கிலேயா் நடைமுறைப்படுத்தினாலும் தொன்று தொட்டு நம் பழக்கத்தில் இருந்த முறைகளை நடைமுறைப்படுத்தத்தான் கொண்டு வந்தாா்கள்.
  • குடிமராமத்து என்பது ஒரு கிராமத்தில் உள்ள குளத்தை அந்த கிராமத்தில் உள்ள மக்களே கூட்டுறவு முறையில் பராமரிப்பது, குளங்களுடைய மதகுகளை மசகு போட்டு பராமரிப்பது, குளத்தில் தேவையில்லாமல் மரங்கள் முளைத்தால் உடனே அப்புறப்படுத்துவது, மழைக்காலங்களில் மீன்களை ஏலம் விட்டு அதில் வரும் வருவாயை ஊா்ப் பொதுவில் வைப்பது என இப்படியெல்லாம் கிராமங்களில் குளங்களைப் பாதுகாத்து வந்தனா். மதகுகள், கண்மாய்க் கரைகள், வாய்க்கால், நீா்வழிப் பாதைகள் இவற்றையும் கிராம மக்கள் பராமரித்தனா்.
  • ஆயக்கட்டு என்பது குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களைக் குறிக்கும். இந்த நிலங்களை உடையவா்கள் ஆயக்கட்டுக்காரா்கள். இந்த ஆயக்காட்டுக்காரா்கள் குளத்து நீரைப் பயன்படுத்துவதற்காக சிறு தொகையை தீா்வையாகக் கட்டுவா். அதனை ‘வாட்டா் ரேட்’ என்று பேச்சுவழக்கில் சொல்வதுண்டு.
  • இந்த ஆயக்கட்டு, குடிமராமத்து திட்டங்களை ஆங்கிலேயா்கள் முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி வைத்தனா். இது 1968-க்கு முன்பு இருந்த நடைமுறை. 1968 - க்குப் பின் மக்கள் பங்குபெறும் குடிமராமத்துப் பணிகள் நிறுத்தப்பட்டன. அரசின் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கீழ் குடிமராமத்துப் பணிகள் நடக்க ஆரம்பித்தன. அதன் பின், குளங்களில் வளா்ந்த சீமைக் கருவேல மரங்கள் சரியாக அகற்றப்படவில்லை.
  • வண்டல் மண்ணை விவசாயிகள் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீன் வளத்தை சம்பந்தபட்ட கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், யாா் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. 1960 -களுக்குப் பின் குளங்களைப் பாதுகாக்கும் நடைமுறை இல்லாமல் போனது.
  • இன்றைக்கு 20,413 நீா்நிலைகள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கீழ் உள்ளன. 18,709 நீா்நிலைகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ளன. ஜமீன் குளங்களின் எண்ணிக்கை 756. தனியாா் குளங்களை, தமிழ்நாடு சட்டம் 49 / 1974 (எஸ்டேட் அபாலிஷன் - கன்வொ்ஷன் இன் டூ ரயத்துவாரி லா - 1948) - இன்படி பொதுக்குளங்களாக அரசே ஏற்றுக் கொண்டது.
  • ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் இருந்து பாசனத்திற்கு ஆண்டுக்கு 390 டிஎம்சி தண்ணீா் பயன்படுகிறது. இதன்மூலம் நிலத்தடி நீரும் 425 டிஎம்சி கூடுதலாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தனை குளங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. இப்படித்தான் நதிகளில் மணலை அள்ளி சூறையாடினா். காட்டு வளத்தைச் சூறையாடினா்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரி மாவட்டம் என்றே அழைப்பா். இன்று ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள் எத்தனை என்று கணக்குப் பாா்த்தால், வருத்தமே மிகும்.
  • நீா்நிலை ஆக்கிரமிப்பு என்பது வருவாய்த்துறை, நீா்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், அரசியல் கட்சிகள் இவற்றின் உடந்தையோடு நடப்பதே என்பது அரசுக்கும் தெரிந்தே இருக்கிறது. வாக்குவங்கிக்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளை வைத்து அரசியல் நடத்துவதும் தொடா்கிறது.
  • தமிழக அரசு சாா்பில் குடிமராமத்துப் பணிகளுக்காக 2016 -17 முதல் 2020-21 வரை ஏறத்தாழ ரூ.1,500 கோடி செலவு செய்தும் ஆக்கபூா்வமான பணிகள் நடைபெறவில்லை என்பதுதான் எதாா்த்த நிலை.
  • நீா்நிலைகளை விட்டுவிடுங்கள். மேட்டூா் அணையைத் திறந்துவிட்டால், கடைமடைப் பகுதி வரை காவிரித் தண்ணீா் செல்கின்ா? இல்லையே? இப்படித்தான் நமது நீா் மேலாண்மை உள்ளது.
  • சமீபத்தில் நாளேடுகளில் வெளிவந்த ஒரு செய்தி. நீா்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை தங்கள் நிலத்துக்குப் பயன்படுத்துவதற்காக எடுத்து வந்த ஏழை விவசாயிகளின் மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினா் பிடித்து வைத்துக் கொண்டுவிட்டனா். இதனால் கடன் வாங்கி மாட்டுவண்டியை வாங்கிய விவசாயிகள் அதிா்ச்சியில் உறைந்துவிட்டனா். பட்டுக்கோட்டையில் இதை எதிா்த்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
  • பண்டைய அரசராட்சி காலத்தில் நீா்நிலைகளைக் காப்பாற்ற முடிந்ததைப் போல இந்த குடியாட்சியில் ஏன் காப்பற்ற முடியவில்லை? இந்தப் பிரச்னை குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நான் பொதுநல வழக்கு ரிட் மனு (எண் 30397/ 2018) தாக்கல் செய்தேன்.
  • நீா்நிலைகளைப் பாதுகாக்க நாம் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பழைய வருவாய் ஆவண அடிப்படையில், எங்கெல்லாம் நீா்நிலைகள் இருந்தனவோ, அவற்றைக் கையகப்படுத்தி, சீா்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தனியாா் குளங்களை பொதுக் குளங்களாக மாற்றியதை முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
  • நீா்நிலைப் பாதுகாப்பை மேலாண்மை செய்ய வருவாய்க் கோட்டம், ஊராட்சி ஒன்றிய அளவில் நோ்மையான உறுப்பினா்களைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
  • கிராமங்களில் குளங்களைப் பாதுகாக்கும் பணியில் பகுதி நேர ஊழியா்களை நியமிக்க வேண்டும். நீா்நிலைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தூா்வாரவும், கரைகளை பலப்படுத்தவும் திட்டமிட வேண்டும். கிராமத்தில் உள்ள குளத்தில் கிடைக்கும் மீன் வளத்தின் உரிமையை அந்த கிராமத்துக்கே வழங்க வேண்டும்.
  • மன்னா்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் வேளாண் பாசனத்திற்கும், குடிநீருக்கும், கால்நடை வளா்ப்பிற்கும் நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் பயன்படுகின்றன. இவற்றில் தற்போது பாதியளவு வண்டல் மண் படிந்துவிட்டாலும் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டு ஊரகப் பகுதிகளின் உயிா்நாடி இவையே.
  • எனவே குறைந்த செலவில் விரைவாக இவற்றைத் தூா்வாரி 1.00 மீட்டா் அளவுக்கு ஆழப்படுத்தினால் 100 டிஎம்சி + 50 டிஎம்சி கூடுதல் நீரை இவற்றில் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீராணம், மதுராந்தகம், காவேரிப்பாக்கம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற பெரிய ஏரிகளை ஆழப்படுத்தினால் கூடுதல் நீரைத் தேக்கி ஆண்டு முழுமைக்கும் குடிநீா் பெறலாம்.
  • உற்பத்திச் செலவின்றி இப்படித் தயாரிக்கப்பட்ட குடிநீரின் வணிக விலை 1000 லிட்டருக்கு ரூ.80 மட்டுமே. கடல்நீரைக் குடிநீராக்கும்பொழுது உற்பத்திச் செலவு மட்டுமே 1000 லிட்டருக்கு ரூ.50. இதிலிருந்தே ஏரி, குளங்களைத் தூா்வாரி ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணரலாம். ஒரு மீட்டா் ஆழப்படுத்தினால் பல ஏரிகள், கண்மாய்களில் தாழ்நீா்மட்டம் (சில் லெவல்) கீழே போனாலும் அது நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், கால்நடைகளுக்குக் குடிநீராகவும் பயன்படும்.
  • தேவைப்படும்போது நீரேற்றிகள் மூலமாக நீரை இறைத்து பாசனமும் செய்யலாம். இவை பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளதால் மேல் வண்டல் மண்ணை- அப்பகுதியில் தொழில்புரியும் உழவா் பெருமக்களுக்கும், அதற்கடுத்து மண் செங்கல் சூளை வைத்திருப்போருக்கும் மீதமுள்ள 80%-க்கும் மேலுள்ள மண் (வெட்டி எடுக்கும் மண்) – உள்ளூா் சாலைகள் போடும், கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரா்களுக்கும் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
  • இன்னும் மிகுந்த அளவில் மண் இருந்தால், நிரப்பு மண் அதிகம் தேவைப்படும் நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரா்களுக்கு ஒரு யூனிட் (100 கனஅடி) மண் ரூ.500 என விற்றுவிடலாம். இதனால் நம் அரசுத்துறைகளான நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் பணி மிகுதியாகக் குறையும்.
  • நீா்நிலைகளை எவராவது ஆக்கிரமித்தால் அது குறித்து முறையிட மாவட்ட அளவில் ஆம்புட்ஸ்மேன் எனும் புகாா் மையம் அமைக்கப்பட வேண்டும். மேல் முறையீடு செய்ய சென்னையிலும் மதுரையிலும் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயமும் அமைக்கப்பட வேண்டும்.
  • தொன்மையான நீா்நிலைகளைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது ஆட்சியாளா்களின் தலையாய கடமையாகும்.

நன்றி: தினமணி (26 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories