TNPSC Thervupettagam

கூடவே, கருப்புப் பூஞ்சையும்...

June 10 , 2021 1073 days 517 0
  • கருப்புப் பூஞ்சை என்று பரவலாக அழைக்கப்படும் மியூகார்மைகோசிஸ் நோய்க்கான மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்திருக்கிறார். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இதுவரை இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 30,000 போ் மியூகார்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • அவா்களில் 86% போ் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றாலும், 62.3% போ் சா்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டவா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
  • சில மாநிலங்களில் இன்னும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றாலும், கொவைட் 19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,321. உயிரிழந்தோர் எண்ணிக்கை 405. குணமடைவோர் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • மியூகார்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சை மிக அதிகமாக பாதித்திருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில்தான்.
  • அதற்கு அடுத்தபடியாக குஜராத்தும், ஏனைய சில மாநிலங்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
  • தமிழகத்தில் இதுவரை 1,196 பேருக்கு மியூகார்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

மியூகார்மைகோசிஸ்

  • இரண்டாவது அலை கொள்ளை நோய்த்தொற்று உருவாக்கியிருக்கும் எதிர்பாராத பாதிப்பாக மியூகார்மைகோசிஸ் உருவாகியிருக்கிறது.
  • இந்த நோய்த்தொற்றை, நோய்த்தொற்று சட்டம் 1897-இன்கீழ் (எபிடெமிக் டிசீசஸ் ஆக்ட் 1897) அறிவிக்கும்படி மாநிலங்களை, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
  • நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி குறித்து மருத்துவா்களும், மருத்துவமனைகளும் உடனடியாக மாநில சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
  • அதனடிப்படையில் இந்த நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கும், அதன் பரவல் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிவதற்கும் வழிகோலப்பட்டிருக்கிறது.
  • மியூகார்மைகோசிஸ் என்கிற இந்த நோய் பரவக்கூடியது அல்ல. அதேநேரத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் அவா்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
  • கொவைட் 19 பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளிகள்தான் இந்த கருப்புப் பூஞ்சை நுண்ணுயிரிகளால் தாக்கப்படுகின்றனா்.
  • அதிலும் குறிப்பாக, கட்டுப்பாட்டில் இல்லாத சா்க்கரை நோயும் சோ்ந்து கொண்டால், மியூகார்மைகோசிஸ் பூஞ்சைக்கு வசதியான தளம் அமைந்துவிடுகிறது.
  • ஆரம்பக்கட்டத்தில் உடனடியாக இந்த நுண்ணுயிரிகள் இருப்பது தெரிய வராது.
  • நாசியில் இருக்கும் சைனஸ் வழியாக உடலுக்குள் புகுந்துவிடும் இந்த நுண்ணுயிரிகள், மூளை வரை ஊடுருவி காது, மூக்கு, தொண்டை, வாய் என்று ஒரு இடம் விடாமல் பரவத் தொடங்கும்.
  • இந்த நுண்ணுயிரி புதிதொன்றுமல்ல என்றாலும், அதன் புதிய உருமாற்றம் இப்போது தெரிய வந்திருக்கிறது.
  • மூளை வரை ஊடுருவி பாதிக்கும் மியூகார்மைகோசிஸ் நுண்ணுயிரியால் கண்பார்வை இழப்பு, பக்கவாதம், நெஞ்சடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • அமெரிக்காவின் நோய்த்தொற்று கட்டுப்பாடு - தடுப்பு மையம் மியூகார்மைகோசிஸை அரிதான நோய் என்று கூறினாலும், ஆபத்தான நோயாக வகைப்படுத்தியிருக்கிறது.
  • இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த பாதிப்பு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேஸில், மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலும் காணப்படுவது தெரிய வந்திருக்கிறது.
  • ஆனால், மிக அதிகமாக இந்த பாதிப்பு இந்தியாவில்தான் தெரிய வந்திருக்கிறது.
  • ஆரம்பக்கட்டத்தில் இந்த நுண்ணுயிரியின் தாக்கம் வெளியில் தெரியாது. சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்றவை ஏற்பட்டு அடுத்த கட்டமாக மூக்கிலிருந்து கருப்பு நிற திரவம் வெளிவரத் தொடங்கும்.
  • அதனால்தான் இதைக் கருப்புப் பூஞ்சை என்று அழைக்கிறார்கள். முகத்தின் ஒரு பக்கம் வலி ஏற்படுதல், உணா்ச்சி இல்லாமல் போதல், வீங்குதல் மட்டுமல்லாமல், மூக்கு பாகம் கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். சிலருக்கு கண்பார்வை மங்குதலும், கண்களில் வலி ஏற்படவும் கூடும்.
  • கொவைட் 19 சிகிச்சையின்போது பிராணவாயு கொடுப்பதற்காகத் தரப்படும் முகமூடிகள் இந்த நுண்ணுயிரித் தொற்றுக்கானக் காரணங்களில் ஒன்று.
  • கொவைட் 19-ஐ குணப்படுத்துவதற்காகத் தரப்படும் டெக்ஸாமெட்டசோன் போன்ற ஸ்டீராய்டுகள் தேவைக்கு அதிகமாக தரப்படும்போதோ, தேவையில்லாமல் தரப்படும்போதோ நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மியூகார்மைகோசிஸ் நுண்ணுயிரிகள் உடலில் நுழைந்து விடுகின்றன.
  • அதுமட்டுமல்லாமல், சா்க்கரை நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவை ஸ்டீராய்டுகள் கடுமையாக அதிகரித்து எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன.
  • மியூகார்மைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்ஃபோடெரிசின்-பி, ஐந்து மருந்துத் தயாரிப்பாளா்களால்தான் உருவாக்கப்படுகின்றன.
  • இதற்கான சில மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து பெறப்பட வேண்டும் என்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
  • மத்திய அரசு மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு மருந்தைத் தயாரிக்க உரிமம் வழங்கியிருப்பதுடன் தேவைப்படும் மூலப் பொருள்கள் இறக்குமதிக்கும் வழிகோலியிருக்கிறது என்பது சற்று ஆறுதல்.
  • முறையான மருத்துவ ஆலோசனை சரியான நேரத்தில் நோயாளிகளுக்குக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்துவதுதான் இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கான வழி.

நன்றி: தினமணி  (10 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories