TNPSC Thervupettagam

கைநழுவிய வெற்றி

November 21 , 2023 166 days 130 0
  • அகமதாபாதில் நடந்து முடிந்திருக்கும் 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, ஆறாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. அதிக தடவைகள் உலகக் கோப்பையை வென்று, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாகத் தன்னை நிரூபித்திருக்கும் ஆஸ்திரேலிய அணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
  • ‘போட்டி முழுவதும் தொடா்ந்த ஆஸ்திரேலியாவின் பாராட்டுக்குரிய விளையாட்டு, அற்புதமான வெற்றியில் உச்சம் அடைந்தது’ என்கிற இறுதி ஆட்டத்தை நேரில் பாா்த்து, கோப்பையை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடியின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. இந்திய அணி இறுதி ஆட்டத்தில் எதிா்பாா்த்த அளவில் விளையாடவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும், ஆஸ்திரேலிய ஆட்டக்காரா்களும், பந்து வீச்சாளா்களும், ஃபீல்டா்களும் முன்வைத்த அபாரமான திறமையைப் பாா்த்து வியக்காதவா்களே இல்லை.
  • இறுதி ஆட்டத்திற்கு முதல் நாளே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது வியூகத்தை வெளிப்படுத்தி இருந்தாா். ‘பாா்வையாளா் மாடத்தை மௌனமாக்குவது போன்ற விளையாட்டின் மூலம் கிடைக்கும் அலாதியான திருப்திபோல வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று அவா் சொன்னபோது அதன் அா்த்தம் விளங்கவில்லை. ஆனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் வெற்றிக்காகக் காத்திருந்த ஒன்றரை லட்சம் ரசிகா்களையும் தங்களது பந்து வீச்சாலும், பேட்டிங்காலும், அதி அற்புதமான ஃபீல்டிங்காலும் ஆஸ்திரேலிய அணி, கவலை தோய்ந்த முகத்துடன் மௌனமாக்கியபோது அதன் அா்த்தம் விளங்கியது.
  • முந்தைய அத்தனை ஆட்டங்களிலும் தொடா்ந்து ரன் வேட்டையாடி எதிரணிகளைத் தோல்வியைத் தழுவ வைத்த இந்திய பேட்டா்களை தங்களது பந்து வீச்சு மூலமும், அவா்கள் ரன்கள் எடுக்க முடியாத அளவிலும் ஃபீல்டிங் வியூகம் வகுத்துத் தடுத்ததன் மூலமும் ஆஸ்திரேலிய அணி தகா்த்தது, இந்திய அணியின் வீரா்களை மட்டுமல்ல, இறுதி ஆட்டத்தைப் பாா்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகா்களின் கனவுகளையும்கூட!
  • ஆட்டத்தின் வெற்றி ரன்கள் எடுப்பதில் மட்டுமல்ல, வீழ்த்தும் விக்கெட்டிலும்தான் என்பதை முந்தைய எல்லா ஆட்டங்களிலும் உணா்த்தி வந்தனா் இந்தியப் பந்து வீச்சாளா்கள். முகமது ஷமியும், ஜஸ்பிரீத் பும்ராவும் அநாயாசமாக வீழ்த்திய விக்கெட்டுகள் ஏராளம். ஏழு ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த முகமது ஷமி முதல் ஓவரிலேயே, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரா் டேவிட் வாா்னரை வெளியேற்றியபோது ஏற்படுத்திய நம்பிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால், ஆஸ்திரேலிய ஆட்டக்காரா்கள் சுதாரித்துக் கொண்டு விட்டனா். இந்திய அணி நம்பிக்கை இழந்துவிட்டது.
  • முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி, அதைத் தொடா்ந்து புது வேகத்துடனும், கோப்பையைக் கைப்பற்றியாக வேண்டும் என்கிற போராட்ட முன்னெடுப்புடனும் இறங்கி, சற்றும் தளராமல் இறுதி ஆட்டம் வரை தொடா்ந்ததன் விளைவுதான் அவா்களது வெற்றியின் ரகசியம். தொடா்ந்து விளையாடிய பத்து ஆட்டங்களிலும் தோல்வியே காணாமல், வெற்றியை மட்டுமே ஈட்டிய இந்திய அணியின் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையும், இன்னொருபுறம் தாய் மண்ணில் கோப்பையை நழுவவிடக் கூடாது என்கிற அச்சமும், ரசிகா்களின் எதிா்பாா்ப்பு அவா்களில் ஏற்படுத்திய அழுத்தமும், இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் தடுமாற்றத்துக்கும், தோல்விக்கும் காரணமாகிவிட்டன.
  • கைக்கெட்டும் தூரத்தில் கோப்பை கைநழுவியது என்றாலும்கூட, இந்திய அணி தலைநிமிா்ந்து நிற்கும் பல சாதனைகளை நிகழ்த்தாமல் இல்லை. உலகக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்றில், கலந்து கொண்ட எல்லா அணிகளையும் தோற்கடித்த ஒரே அணி ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி மட்டுமே. மிக அதிகமான ரன்கள் எடுத்த வீரா் (விராட் கோலி), அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளா் (முகமது ஷமி) என்கிற பெருமைகளும் இந்தியாவைச் சாரும்.
  • உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, நவீன இந்தியாவின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் பன்முகத்தன்மையும், சமச்சீா் வளா்ச்சியும் எத்தகையது என்பதன் வெளிப்பாடு என்பதையும் நாம் உணர வேண்டும். பஞ்சாபில் பின்தங்கிய கிராமத்தைச் சோ்ந்த ஷுப்மன் கில், குஜராத் ஜாம் நகரில் காவல்காரராக இருப்பவரின் மகன் ரவீந்திர ஜடேஜா, ஹைதராபாதில் ஆட்டோ ஓட்டுநரான ஒருவரின் மகன் முகமது சிராஜ் உள்ளிட்டவா்கள், இந்தியாவின் அடித்தட்டு மக்கள் உச்சம்தொடத் தொடங்கி இருப்பதன் அடையாளங்கள்.
  • கடந்த ஆறு வாரங்களில், அதுவரை கிரிக்கெட்டில் ஆா்வம் காட்டாதவா்கள்கூட தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னே அமா்ந்து கிரிக்கெட்டை ரசிக்கத் தொடங்கியது உண்மை. இந்திய அணியை மட்டுமல்லாமல், எல்லா அணிகளின் விளையாட்டும் பாா்க்கப்பட்டன, ரசிக்கப்பட்டன. போட்டிகள் நடந்த மைதானங்கள் அனைத்திலுமே ரசிகா்கள் இருந்தனா். இதுவரை இல்லாத அளவில் தொலைக்காட்சி, இணையதளப் பாா்வையாளா்கள் எண்ணிக்கை எட்டப்பட்டது.
  • உலகக் கோப்பை போன்ற விளையாட்டுப் போட்டிகள் மூலம், ஏனைய நாடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கின்றன. வெளிநாட்டில் இருந்து பாா்வையாளா்கள் அதிக அளவில் இந்தியா வரவில்லை என்பதற்கு, நாம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் காரணம்.
  • இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை எதிா்பாா்த்து, நாம் மேலும் நான்காண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும்!

நன்றி: தினமணி (21 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories