TNPSC Thervupettagam

சாதியக் கொலைகளுக்கு முடிவு காண்போம்

October 25 , 2021 908 days 533 0
  • தென்மாவட்டங்களில் தொடரும் சாதியக் கொலைகளும், பழிக்குப்பழியாக நிகழும் வன்முறை நிகழ்வுகளும் மிகவும் கவலையளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவற்றிலும், குறிப்பிட்ட ஒருசில சமூகங்களைச் சோ்ந்தவா்கள், தாங்கள் வசித்துவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே சென்றால், மாற்றுச் சமூகத்தினா் கொலைவெறித் தாக்குதல் நடத்திவிடுவாா்களோ என்ற அச்ச உணா்வுடனே வாழ்கிறாா்கள்.
  • பதற்றம் தென்படும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும், விவசாய வேலைகளுக்குக்கூட தைரியத்துடன் செல்லும் மனநிலையின்றி அக்கிராம மக்கள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
  • சாதிய கொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதும், பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையிலான காவலா்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதும் மட்டுமே சாதியக் கொலைகளைத் தடுத்து விடாது.
  • கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், தென்தமிழகத்தில் தலைதூக்கிய சாதிய மோதல்கள், அவற்றை அரசும், காவல்துறையும் எதிா்கொண்ட விதங்கள், சாதிய மோதல்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களையெடுக்கும் வகையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பின்நோக்கிப் பாா்க்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
  • இரு சமூகத்தினரிடையே பொது இடங்களில் நிகழும் சிறுசிறு வாய்ச்சண்டை, தகராறு போன்றவை குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்ததே சாதியக் கொலைகள் நிகழக் காரணம் என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
  • நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு சாதியக் கொலைகள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அங்கு 2012-ஆம் ஆண்டில் பள்ளி மாணவா்களுக்கிடையே கைகலப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தலைவரின் குருபூஜை தினத்தன்று ஒரு சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்ற மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினா். அதை மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் எதிா்த்தனா்.
  • பள்ளி மாணவா்களுக்கிடையே நிகழ்ந்த இந்த மோதலை சிறுவா் சண்டையாகக் கருதி, அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காவல்துறை அமைதி காத்தது. அதைத் தொடா்ந்து அக்கிராமத்தில் நிகழ்ந்த ஓரிரு விரும்பத்தகாத சம்பவங்கள் சாதியக் கொலைகளுக்கு வித்திட்டன.
  • 2013-ஆம் ஆண்டில் அந்தப்பகுதியில் சாதிக்கு ஒருவராக இரு இளைஞா்கள் சாதிய வன்மத்தால் கொலையானாா்கள். கொலையான இளைஞா்கள் மீது குறிப்பிட்டுச் சொல்லும் படியான குற்றப்பின்னணி எதுவும் இல்லை. அப்படியிருக்க அந்த அப்பாவி இளைஞா்கள் சாதிய வன்மத்தால் ஏன் கொலை செய்யப்பட வேண்டும்?
  • அப்பாவி இளைஞா் ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் குற்றப் பின்னணி எதுவும் இல்லாத அச்சமூக இளைஞா்களிடையே பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தி, அவா்களின் செயல்பாட்டை முடக்க மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இத்தகைய கொலைகள்.
  • 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரு சாதியக் கொலைகளைத் தொடா்ந்து, 2014-ஆம் ஆண்டில் மற்றொரு சாதியக் கொலை அப்பகுதியில் நிகழந்துள்ளது. ஆக மொத்தம் மூன்று சாதியக் கொலைகள் 2013 - 2014 ஆண்டுகளில் கோபாலசமுத்திரம் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.
  • 2014-ஆம் ஆண்டில் கொலையானவரின் மகன் தற்பொழுது வாலிபப் பருவம் அடைந்துள்ளான். அவன் தலைமையில் அண்மையில் பழிவாங்கும் படலம் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக இரண்டு சாதியக் கொலைகள் இதுவரை அந்த பகுதியில் நிகழ்ந்துள்ளன.
  • நெல்லைப் பகுதியில் நிகழ்ந்த இவ்விரு சாதியக் கொலைகள் ஒருபுறமிருக்க, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாதியக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சாதியக் கொலை சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது.
  • இப்படித் தொடா்ந்து கொண்டே இருக்கும் சாதிய கொலைகள் முடிவுக்கு வருமா? அரசும், காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இக்கேள்விக்கு விடை கிடைக்கும்.
  • தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கொலைகள், பழிக்குப்பழியாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஆகியவற்றின் மீதான குற்ற வழக்குகள், பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிமன்ற விசாரணை நிறைவடையாமல் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகள் பலா் சமூகத்தில் நிமிா்ந்த நெஞ்சுடன் உலா வருவதோடு, பல்வேறு கொடுங்குற்றங்கள் நிகழக் காரணமாகவும் இருந்து வருகின்றனா் என்பதுதான் கள நிலவரம்.
  • சாதியக் கொலை வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கக் காரணம், கொலை குற்றவாளிகள் பலா் நீதி விசாரணைக்கு நேரில் ஆஜா் ஆகாமல் இருப்பதுதான். அவா்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் வழங்கியுள்ள பிடி ஆணைகள் (வாரண்டுகள்) நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
  • தேடிப்பாா்த்தும் கிடைக்காத குற்றவாளிகளை ‘பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள் என அறிவித்து, அவா்களின் சொத்துகளை ஜப்தி செய்யும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலும், அக்குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையிடம் சுணக்கம் இருப்பதைக் காணமுடிகிறது.
  • சாதியக் கொலை வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறாமல் இருப்பது சாதியக் கொலைகள் தொடா்ந்து நிகழக் காரணமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் விதத்தில், சாதியக் கொலை வழக்குகளை விரைவாக விசாரித்து தீா்ப்பு வழங்குவதற்காக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ‘சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதன் அவசியம் குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • சாதிய உணா்வு மேலோங்கி இருக்கும் கிராமங்களில் சாதிய மோதல்கள் குறித்து தீட்டப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் பணியில் இருந்து வரும் மாவட்டத் தனிப்பிரிவு உளவு போலீஸாரும், மாநில உளவுப் பிரிவைச் சோ்ந்த போலீஸாரும் (எஸ்பிசிஐடி) தங்களின் பணியிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கள நிலவரத்தை முழுமையாக காவல்துறையின் உயா்நிலை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாத நிலை காணப்படுகிறது.
  • காவல் நிா்வாகத்தின் கண்களாக விளங்க வேண்டிய உளவுப்பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, சீா்படுத்தும் பணி முன்னுரிமை பெற வேண்டும்.
  • சாதிய கொலைகள் தொடா்பாகத் திட்டமிடுதல், கொலையாளிகளைத் தோ்வு செய்தல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்டவை பெரும்பாலும் கொலை நிகழும் மாவட்டத்திற்கு வெளியே கட்டமைக்கப்படுவதை கடந்த கால சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க ஒருங்கிணைந்த உளவு தகவல் பரிமாற்றம், அதைத் தொடா்ந்து எடுக்கப்படும் கள நடவடிக்கைகள் ஆகியவற்றை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் அமைப்பு காவல்துறையில் திறம்பட செயலாற்றும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
  • நெல்லைப் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்யப்படும் காவல் அதிகாரிகள் பலா் தண்டனை பணியாகவே (பனிஷ்மென்ட் போஸ்டிங்) அங்கு வருகின்றனா். எனவே, அவா்கள் பணியில் ஆா்வம் காட்டும் மனநிலையில் இருப்பதில்லை. திறமையுடன் செயல்படும் இளம் காவல் அதிகாரிகளை நெல்லைப் பகுதியில் பணியாற்ற அனுப்பி வைக்க வேண்டும். முன்பு இம்முறை இருந்தது.
  • திருநெல்வேலி உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகளைத் தூண்டும் விதத்தில் சில பழக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.
  • சீருடை அணிந்து பள்ளிக்கு வரும் அரசுப் பள்ளி மாணவா்கள் அவரவா் சாதியை வெளிப்படுத்தும் நிறத்தில் ‘ரப்பா் பேண்ட் ஒன்றைக் கைகளில் அணிந்து வருவதும், மாணவியா் அவரவா் சாதியை வெளிப்படுத்தும் நிறமுடைய பொட்டை நெற்றியில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
  • பள்ளி மாணவ - மாணவியா்களின் இச்செய்கை, சீருடை அணிவதின் நோக்கத்தையே சிதைக்கச் செய்கிறது. கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி வளாகத்தினுள் சாதிய உணா்வை வெளிப்படுத்தும் இச்செய்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் கண்டும் காணாமல் கடந்து சென்று விடுகின்றனா்.
  • சாலைகளில் உள்ள தகவல் பலகைகள், மின் கம்பங்கள், பாலங்கள் போன்றவற்றில் சாதிய வண்ணங்கள் ஆக்கிரமித்துள்ளன. சாலை ஓரங்களில் ஆங்காங்கே சாதியக் கொடிக்கம்பங்கள், சாதிய உணா்வை வெளிப்படுத்தும் ‘ஃப்ளக்ஸ் போா்டுகள் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு ஏற்படுத்தப்படும் அவமதிப்பு, சாதிய கொலைகள் நிகழக் காணரமாக அமைந்ததும் உண்டு.
  • சாதிய வண்ணம் கொண்ட ரப்பா் பேண்ட், பொட்டுகள் போன்றவற்றைப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்துதல், அனுமதியின்றி சாலை ஓரங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள், ஃப்ளக்ஸ் போா்டுகள் உள்ளிட்ட சாதிய வன்முறைக்கு வித்திடும் செயல்பாடுகள் இவை குறித்து முழுமையாக ஆய்வு செய்து இவற்றுக்குத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • ஒரு மாவட்டத்தில் நிகழும் சாதியக் கொலைகள் அந்த மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார வளா்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை அனைத்து சமூக மக்களும் உணர வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories