TNPSC Thervupettagam

சிறுதானிய இயக்கம் முதல் மிளகாய் மண்டலம் வரை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-ன் முக்கியமான 11 அறிவிப்புகள்

March 22 , 2023 400 days 390 0
  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை எடுத்துக் கூறினார். முன்னதாக சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
  • இதனைத் தொடர்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் உரையை வாசித்தார். அதில் கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். காவிரி டெல்டாவில் ரூ.1000 கோடி செலவில் வேளாண் தொழில் பெருந்தடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வேளாண் பட்ஜெட்டின் 11 முக்கிய அறிவிப்புகள்:

1. தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்;

  • சிறுதானிய திருவிழாக்கள்: 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.
  • மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்” இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்.

2. நம்மாழ்வார் விருது;

  • பரிசு ரூ.5 லட்சம்: ஆரோக்கியத்திற்கு வழங்குவது இன்றியமையாதது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5) சிறந்த அங்கக விவசாயிக்கான " நம்மாழ்வார் விருது"
  • அங்கக வேளாண்மையில் திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ”நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

3. பருத்தி இயக்கம்:

  • நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், இவ்வரசு, “நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச்” செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

4.மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம்:

  • மதுரைக்கும் மல்லிகைக்குமான தொடர்பு, இன்று நேற்றல்ல. சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. எனவே மல்லிகைக்குப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்ததாகும். மல்லிகை மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.
  • குறிப்பாக, பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இத்திட்டம் தொடர் திட்டமாக ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்தொகுப்பிற்குத் தேவையான தரமான மல்லிகைச் செடிகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வழிவகை செய்யப்படும். மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

5. மிளகாய் மண்டலம்:

  • மிளகாய், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 எக்டராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். இப்பகுதியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். நீர் ஆதாரம் இல்லாத இடங்களில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு நுண்ணீர்ப் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • வரும் ஆண்டு, இம்மாவட்டங்களில் 1,000 எக்டர் பரப்பிலுள்ள சீமைக்கருவேல மரங்கள், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு, மிளகாய் சாகுபடி செய்யப்படும்.
  • மேலும், 1,000 எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குவதோடு, மிளகாய்த்தூள், மிளகாய் பேஸ்ட் (Chilli paste), மிளகாய் துகள்கள் (Chilli flakes) மிளகாய் எண்ணெய் (Chilli oil) போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவாக பதப்படுத்துதலும், மதிப்புகூட்டுதலும் செய்யும் கூடங்கள், சூரிய உலர்த்திக் கூடம், தூய்மையான முறையில் காய வைத்து சந்தைப்படுத்திட உலர் பாய் போன்றவை வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஆண்டில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

6. கறிவேப்பிலைத் தொகுப்பு:

  • உணவுக்கு மணமூட்டும் கறிவேப்பிலை, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு கறிவேப்பிலைக்கு என ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு, உரிய பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து, அதிகளவில் அங்கக இடுபொருட்களைப் பயன்படுத்தி, சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளில் 1,500 எக்டர் பரப்பில் கறிவேப்பிலைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், 100 எக்டரில் செங்காம்பு இரக கறிவேப்பிலை பயிரிட தரமான நடவுச்செடிகள், நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் வழங்கப்படும். உலர் கறிவேப்பிலை, கறிவேப்பிலைத்தூள், பேஸ்ட் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
  • மேலும், இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்குப் பண்ணை இயந்திரங்கள், சூரிய உலர்த்திக் கூடம், மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படும். விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு ஏற்றுமதிக்குரிய தரக் கட்டுப்பாடு உறுதி செய்யப்படும். இத்திட்டம், வரும் ஆண்டு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

7. புவிசார் குறியீடு:

  • ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. தட்பவெப்ப நிலை, பெய்யும் மழை, அடிக்கும் காற்று, படரும் வெளிச்சக் கதிர்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சுவை பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற்றவை இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை. அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

8. தொன்மை சார் உணவகங்கள்:

  • உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே உழவர்கள் காய்கறி மூட்டையோடும், கீரைக் கட்டோடும் வந்து விடுகிறார்கள். மதியம் வரை அவர்கள் தங்கள் காய்கறிகளையும், பழங்களையும் விற்பனை செய்து களைத்துப் போகிறார்கள். அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையிலும், வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வகையிலும் தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும் ,வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

9. சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe):

  • வரும் ஆண்டில், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில், சுய உதவி குழு உறுப்பினர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் 40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்காக, அரசு 40 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.
  • குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையில், அந்தந்த பகுதியில் கிடைக்கும் இயற்கை வள ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் தலா 40 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் வகையில் 44 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • அங்ககத் தேன் உற்பத்தி, மூலிகைத் தோட்டம் அமைத்தல் ஆகியவை கிராமப்புறங்களில் முக்கியமான வாழ்வாதாரப் பணிகளாக விளங்கி வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் இடையே தேன் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து ”மதி” என்னும் வணிகக் குறியீட்டில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையுடன் இணைந்து பணியாற்றும்.

10. வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு:

  • தற்போது, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், யானை, காட்டுப் பன்றி, மான், போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது என்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வனத்துறை மூலம் அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆராய்வதற்கு கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும், விவசாயிகளும் இடம்பெறுவார்கள். இக்குழு, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து, இதற்கான தீர்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

11.காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்:

  • சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் திருச்சி-நாகப்பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தினை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகுப்பும், சந்தை இணைப்புகள், வல்லுனரின் வழிகாட்டுதல்கள், ஒற்றைச் சாளர முறை வசதிகள் உருவாக்கித் தரப்படும். சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலை திறம்பட மேற்கொள்ளும் வகையில். பொது வசதிகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
  • காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும். இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துத் திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும்.

நன்றி: தி இந்து (22 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories