TNPSC Thervupettagam

ஜி.யு.போப்பின் நண்பர் உ.வே.சாமிநாதையர்

February 18 , 2023 455 days 526 0
  • ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும்படி பலர் தூண்டிய போதும் ‘எனக்குத் தமிழ் ஒன்றே போதும்’ என்று வாழ்ந்து பெருஞ்சாதனைகள் புரிந்த உ.வே.சாமிநாதையர் தம் சமகால ஆளுமைகள் பலரோடு நல்ல நட்பு கொண்டிருந்தார். திருக்குறள், நாலடியார், திருவாசகம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராகிய ஜி.யு.போப் அவர்களுடன் உ.வே.சா. கொண்டிருந்த நட்பு தனித்தன்மை வாய்ந்தது. 1820, பிப்ரவரி 11 அன்று கனடாவில் பிறந்த ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். இடையில் இரண்டாண்டுகள் தவிர 1882ஆம் ஆண்டு வரை நாற்பதாண்டுகள் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் தங்கிக் கல்விப் பணியும் சமயப் பணியும் செய்தார்.

நண்பர்களின் கடிதப் போக்குவரத்து

  • ஜி.யு.போப்பைவிட உ.வே.சா முப்பத்தைந்து ஆண்டுகள் இளையவர். தமிழ்நாட்டில் போப் இருந்த காலத்தில் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு வரவில்லை. 1872 முதல் 1882 வரை கடைசிப் பத்தாண்டுகள் பெங்களூரில் இருந்தார் போப். 1880இல் கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா ஆசிரியரானார். பதிப்புலகில் அவர் அழுத்தமாகக் காலூன்றிய சீவக சிந்தாமணிப் பதிப்பு 1887இல் வெளியாயிற்று.
  • ஆகவே, இருவருக்கும் அறிமுகம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் இருந்தன. அதன் அடிப்படையில் இருவருக்கும் நட்பு உருவாகி வளர்ந்தது.
  • உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி நூலை எப்படியோ பெற்ற போப் தம் நாலடியார் மொழிபெயர்ப்பு நூலில் அப்பதிப்பைப் பாராட்டி எழுதினார். 1893ஆம் ஆண்டு வெளியான நாலடியாரின் முன்னுரையில் “எளிதாக வாசிக்கத்தக்க வகையில் வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவக சிந்தாமணி பதிப்பு போற்றத்தக்கது” என்று (p.xii) எழுதினார்.
  • இவ்வாறு அவர் எழுதியுள்ள தகவலைப் பூண்டி அரங்கநாத முதலியார்தான் உ.வே.சாவிடம் தெரிவித்தார். நாலடியார் பிரதியையும் கொடுத்தார். அதை நினைவில் கொண்டிருந்த உ.வே.சா 1894ஆம் ஆண்டு தாம் புறநானூற்றைப் பதிப்பித்ததும் அதன் ஒரு பிரதியைப் போப்புக்கு அனுப்பிவைத்தார். நெடுநாட்களாக அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. 1895 ஏப்ரல் இறுதியில் போப் எழுதிய கடிதம் மே மாதத்தில் உ.வே.சாவுக்குக் கிடைத்தது. இதுதான் இருவருக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம். அதன் பின் 1908ஆம் ஆண்டு போப் இறக்கும் வரைக்கும் கடிதம் வாயிலான நட்பு தொடர்ந்தது.

அறிவுசார் செயல்பாடுகள்

  • தமக்கு வந்த கடிதங்களை எல்லாம் உ.வே.சா பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அவற்றுள் 1877 முதல் 1900 வரைக்குமான கடிதங்களைத் தொகுத்து ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1’ என ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியிட்டுள்ள இத்தொகுதியில் ஜி.யு.போப் எழுதிய ஐந்து கடிதங்கள் உள்ளன. ‘போப் துரை மேலும் பல கடிதங்கள் எழுதினார்’ என உ.வே.சா குறிப்பிடுகிறார். இந்த ஐந்து கடிதங்கள் போக மீதமுள்ளவை (குறைந்தது பத்துக் கடிதங்களாவது இருக்கும் எனக் கருதுகிறேன்) அடுத்த தொகுதியில் இடம்பெறும். 09.10.1906இல் அவர் எழுதிய கடிதம் ஒன்றை ‘என் ஆசிரியப் பிரான்’ நூலில் (ப.66, 67) கி.வா.ஜகந்நாதன் மேற்கோள் காட்டியுள்ளார். 
  • அவற்றை உள்ளடக்கிய இரண்டாம் தொகுதியும் விரைவில் வெளியானால் இவ்விருவர் நட்பின் பல பரிமாணங்களை ஆழமாக நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதற்கு ஆ.இரா.வேங்கடாசலபதி மனம் வைக்க வேண்டும். அதேபோல ஜி.யு.போப்பும் தமக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடும். அவற்றில் உ.வே.சா எழுதிய கடிதங்களைக் கண்டறிந்து வெளியிட்டால் ஒருவரை ஒருவர் பாராமலே தமிழால் இணைந்த இருவர் நட்புக்கும் காவிய மதிப்பு உருவாகும் என நம்புகிறேன்.
  • இப்போது கிடைக்கும் ஐந்து கடிதங்கள் சொல்லும் செய்திகளே பல. 26 ஏப்ரல் 1895இல் எழுதிய முதல் கடிதத்தில் ‘அன்புள்ள ஐயா’ (Dear Sir) என விளிக்கிறார் போப். 3 ஜனவரி 1896இல் எழுதிய மூன்றாம் கடிதம் ‘உங்கள் உண்மையான நண்பன்’ (Your sincere friend) என்று முடிகிறது. நான்காம் கடிதம் ‘என் அன்பு நண்பருக்கு’ (My dear friend) எனத் தொடங்கி ‘உண்மையான நண்பன்’ என முடிகிறது. தம்மை விட முப்பத்தைந்து ஆண்டு வயது குறைந்தவரை ‘நண்பர்’ என விளித்தும் ‘நண்பன்’ என்று தம்மைச் சொல்லியும் அவரால் எழுத முடிகிறது என்றால் இருவரும் அறிவுத் துறை சார்ந்து ஒருவரை ஒருவர் எந்தளவு அங்கீகரித்துக்கொண்டனர் என்பது தெரிகிறது. ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது இதுதான் போல.

போப்பின் மதிப்பீடு

  • இருவருக்கும் இடையே இத்தகைய நெருக்கம் கூடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பழந்தமிழ் நூல்களை அனைவரும் வாசிக்கும் வகையில் எளிமையாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் கருத்தொற்றுமை முதல் காரணம். புறநானூற்றுப் பதிப்பைப் பயன்படுத்திய போப், ‘புறநானூற்றுப் பதிப்பை நன்றாகப் புரியும்படியாகவும் வாசிக்கத் தூண்டுவதாகவும் ஆக்க முடியுமா? எனக்குத் தமிழ் தெரியும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தாலும் என்னால் பெரும்பாலான பகுதிகளைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்கிறேன். எளிமையாக எழுத உங்களால் முடியுமா? முடியுமானால் நன்கு புரியும்படியாக உள்ள குறிப்புகளும் விளக்கங்களும் உள்ள எளிய கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். பண்டிதர்கள் அல்லாத எங்களிடம் சற்று இரக்கம் காட்டுங்கள்’ என்று எழுதினார்.
  • ‘உங்கள் பதிப்பு திருத்தமாகவும், முழுமையாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதிய தமிழர்களுக்கு விளங்கும்படி இருக்க வேண்டுமன்று விரும்புகிறேன். நீங்கள்தான் அதற்கு வழிசெய்ய வேண்டும். நாம் எல்லாவற்றையும் எளிதானவையாக ஆக்குவோம்’ என்று இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டார். அடுத்த கடிதத்தில் தொல்காப்பியப் பதிப்பு பற்றிய தம் எண்ணத்தை இப்படி எழுதினார், ‘அகரவரிசைப் பொருட்பட்டியலோடும் தேவையான விளக்க உரைகளோடும் கூடிய தொல்காப்பியப் பதிப்பு அவசியம் தேவை. சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பு வெறுமையாக இருக்கிறது. சிந்தாமணியின் இரட்டைப் பிறவியான சூளாமணி உரிய முறையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட வேண்டும்.’ 
  • பழந்தமிழ் நூல்களைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் ஏற்றவர் எனவும் இன்னும் பல நூல்களைப் பதிப்பித்துத் தரக்கூடிய ஆற்றல் உடையவர் எனவும் உ.வே.சாவை போப் மதிப்பிட்டுள்ளார். ஆகவே, அவர் எழுதிய கடிதங்கள் உணர்ச்சியும் அறிவும் கலந்த கலவையாகக் காணப்படுகின்றன. புறப்பொருள் வெண்பா மாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை எனத் தாம் அடுத்தடுத்துப் பதிப்பித்த நூல்களை எல்லாம் போப்புக்கு உ.வே.சா தொடர்ந்து அனுப்பிவந்துள்ளார். அவற்றால் உத்வேகம் பெற்றுக் கற்கவும் மொழிபெயர்க்கவும் கட்டுரைகள் எழுதவும் செய்தார் போப். உ.வே.சாவின் பதிப்புகளை முன்வைத்து ‘ஆசியாட்டிக் ராயல் சொசைட்டி’ பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அவர் எழுதினார்.

அறிவுப் பகிர்வுகள்

  • பதிப்புகள் பற்றிய தம் எண்ணங்களைக் கடிதங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். இன்னும் பதிப்பிக்க வேண்டிய நூல்களைப் பற்றிய ஆவலை வெளிப்படுத்தினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். தாம் செய்த மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றை ஒவ்வோர் ஆங்கில ஆண்டுப் பிறப்பின்போதும் உ.வே.சாவுக்கு அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தார். புறப்பொருள் வெண்பா மாலையை முழுதுமாக மொழிபெயர்த்த அவர் “அது பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன? உங்கள் வழிகாட்டுதல் படியே நான் அதைப் பதிப்பிப்பேன்” என்று எழுதினார்.
  • பொதுவாக நூல்களின் காலம், பின்னணி பற்றியெல்லாம் உ.வே.சா பெரிதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் அல்ல. பதிப்பிப்பதே தம் பணி என நேர்ந்துகொண்டவர். போப் அப்படியானவர் அல்ல. காலம், பின்னணி என வரலாறு சார்ந்த ஆய்விலும் கவனம் கொண்டவர். முச்சங்கம் பற்றிய கருத்துக்கள் புராணக் கதைகள் எனத் தெளிவாகச் சொன்னார். வரலாற்றுக்கான உண்மைத் தகவல்கள் மீது ஆர்வம் காட்டினார். தம் எண்ணங்களை எல்லாம் தயக்கமின்றி உ.வே.சாவிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவற்றுக்கு உ.வே.சா எழுதிய பதில்கள் என்னவாக இருந்தன எனத் தெரியவில்லை. தம் பதிப்புகளில் அவ்வளவாக வெளிப்படுத்தாத ஆய்வுக் கருத்துக்களை அவர் எழுதியிருக்கலாம். உ.வே.சா பற்றிய இன்னொரு பக்கத்தை அவை காட்டக்கூடும். 
  • திருவாசகம் பற்றிய தம் கருத்துக்களையும் ஐயங்களையும் உ.வே.சாவுக்கு எழுதினார் போப். தம் ஆய்வுப் பார்வைகளையும் பகிர்ந்துகொண்டார். குறிப்பாகத் திருக்குறள் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து அதில் எவ்வளவு ஆழம் கண்டவர் என்பதை உணர்த்துகிறது. அது வருமாறு: ‘தமிழ்க் கவிதை அடிகளின் நேர்த்தியுடனும் அழகின் மகுடமாகவும் விளங்கும் குறள் வெண்பாவைத் திருவள்ளுவர்தான் கண்டுபிடித்து இருப்பார் என்ற என்னுடைய சொந்த அனுமானம் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் காலத்திற்கு முன்பே இத்தகைய இரண்டடி வெண்பாக்கள் இருந்தனவா என்பதைப் பற்றி ஐயத்திற்கு இடமின்றி உங்களால் சொல்ல முடியுமா? அவருக்குப் பின்னால் இதைப் போலப் பல போலியான இரண்டடி வெண்பாக்கள் வந்திருக்கின்றன. ஆனால், என்னைப் பொருத்தவரை அவற்றில் ஒரே ஒரு கவிதைகூட இந்த வைர வரிகளுக்கு இணையாக முடியாது. எனவே குறள் வெண்பா இந்தப் பேரறிஞரிடம் தொடங்கி அவருடனேயே முடிந்துவிட்டது என்பது என் நம்பிக்கை.’

இருவரின் தமிழ் பற்று

  • இருவருக்கும் தமிழ் மீது இருந்த பற்று அளவற்றது. தம் முதுமையைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தில் எழுதிய போப் ‘நானோ முதியவன்; நீங்கள் இளையவர்’ என்றார். தமக்குப் பல்வேறு செயல்திட்டங்கள் இருப்பதாகக் கூறிய அவர் தம் வாழ்நாள் குறைவு என்பதையும் உணர்ந்திருந்தார். ‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதினார். உ.வே.சாவுக்கு உடல் நலமில்லை என்னும் செய்தியை அறிந்த போப் “என்னைப் போலவே நீங்களும் இலக்கியப் பணிகளே தலையாய மருந்து என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன். நம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் மேலும் சிறந்த பதிப்புகளை வெளியிடும் பணிகளுக்காகவேனும் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் மீண்டும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்; பிரார்த்திக்கிறேன்” என்று எழுதினார். ‘நம் தமிழ்’ என்று அவர் சுட்டுவது முக்கியமானது. உ.வே.சாவும் தம் முதுமைக் காலத்தில் தமிழே மருந்தாக இருந்ததாகக் கருதி அப்போது பதிப்பித்த நூல்களில் அதைக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார். 
  • புறநானூற்றின் மூன்றாம் பதிப்பை 1935ஆம் ஆண்டு உ.வே.சா வெளியிட்டார். ஜி.யு.போப் இறந்து இருபத்தேழு ஆண்டு கடந்த பிறகு வெளியான பதிப்பு அது. அதன் பதிப்புரையில் ஜி.யு.போப்பை நினைவுகூர்ந்து உ.வே.சா எழுதியுள்ளார். “காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்” (சாமிநாதம், ப.146) என்பது அவர் குறிப்பு. மேலும் ஜி.யு.போப்பின் நட்பு குறித்து ‘என் சரித்திரம்’ நூலின் ஓரியலில் உ.வே.சா விரிவாக எழுதியுள்ளார். போப்பைக் குறித்த தம் மனப் பதிவுகளை அதில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். “அவர் முதல் முறையாக எழுதிய இக்கடிதத்தால் அவருக்கிருந்த தமிழன்பை ஒருவாறு அளந்தறிய முடிந்தது. தமிழ் நூல்களை நல்ல முறையில் நல்ல உருவத்தில் பதிப்பிக்க வேண்டுமென்ற கருத்துடைய எனக்கு அவர் எழுதியனவெல்லாம் மிகவும் பொருத்தமாகத் தோற்றின” (என் சரித்திரம், ப.785) என்கிறார். ‘ஒருபொழுதும்’ குறளைக் காட்டி அவர் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடும்போது ”எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆசையோடு உழைத்து வரும்போது இடையிலே வாழ்க்கை முடிந்துவிட்டால் என் செய்வதென்ற பயம் அவர் நெஞ்சில் இருப்பதை அக்குறள் வெளிப்படுத்தியது. அவர் இன்னும் பல வருஷங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினேன்” (மேற்படி, ப.786) என்கிறார்.
  • இன்னொரு கடிதம் பற்றி எழுதுகையில் ‘அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்துகொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப் பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது’ (மேற்படி, ப.786) என்று கூறுகிறார். பழந்தமிழ் நூல் பதிப்பு பற்றி இருவரின் கருத்துக்களும் ஒத்துப்போயின என்பது இந்நட்புக்குக் கூடுதல் பலமாயிற்று. ‘முதுமைத் தளர்ச்சியிருந்தாலும் தமிழாசை அவர் உடம்பில் ஒரு புதிய முறுக்கை ஏற்றியிருக்க வேண்டும்’ (மேற்படி) என்கிறார் உ.வே.சா.
  • பாரிஸ் நகரத்திலிருந்து கடிதம் மூலமாக உ.வே.சா.விடம் நட்புகொண்ட ஜூலியன் வின்ஸோனையும் போப்பையும் இணைத்துச் சொல்லும்போது “இருவரிடத்தும் விடாமுயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றன ரென்றெண்ணி வருந்தினேன்” என்றும் “இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று” (மேற்படி, ப.787) என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

உ.வே.சாவின் ஊக்கசக்தி

  • தமிழ் மீது பேரன்பு கொண்டு ‘உலகத் தாய்மொழிகளின் வரிசையில் தமிழ் தனது தகுதிக்குரிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நான் உதவியாக வேண்டும்’ என்று எழுதிய ஜி.யு.போப் பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாவுக்கு உத்வேகம் தரும் நண்பராக விளங்கியுள்ளார். தம் வாழ்நாளெல்லாம் தமிழ் நூல்களைக் கற்பதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆய்வதிலும் செலவிட்ட அவரது பல பரிமாணங்களை உணராமல் திருக்குறள் கடவுள் வாழ்த்து மொழிபெயர்ப்பை மட்டும் கொண்டு தமிழுக்கு எதிரானவராகச் சித்திரிக்கும் வெறுப்பரசியல் இன்று நடந்து வருவது வருத்தமளிக்கிறது. ஜி.யு.போப்பின் வாழ்க்கை வரலாறு, அவரது பணிகள், அவர் மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுகள் எனப் பல நூல்களும் கட்டுரைகளும் தமிழில் வெளியாக வேண்டும். ஜி.யு.போப்புக்கு எதிரான வெறுப்பரசியலுக்கு அவையே பதில் சொல்லும். அவ்வகையில் அவரது தமிழன்பை, ஆளுமைப் பண்பை அறிய உ.வே.சாவுக்கு அவர் எழுதிய கடிதங்களே சான்று.
  • உ.வே.சாவின் பணிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் நட்பாக இருந்த ஜி.யு.போப் தம் இறப்பு வரையிலும் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். தம் புகைப்படத்தை உ.வே.சாவுக்கு அனுப்பிவைத்தார். அனேகமாக உ.வே.சாவின் படத்தையும் அவர் கேட்டு வாங்கியிருக்கக்கூடும். அப்படியானால் புகைப்படத்தில் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நண்பர்கள் அவர்கள். மணிமேகலை குறித்து நூல் எழுதும் எண்ணம் கொண்டிருந்த அவர் உ.வே.சா. பதிப்பித்த மணிமேகலையைக் கற்றும் ஆய்வுக்கு உட்படுத்தியும் வந்தார். தம் பிரதியில் பல குறிப்புகளை எழுதிவைத்திருந்தார். போப்பின் இறப்புக்குப் பிறகு அவர் மகன் ஜே.ஏ.ஆர்.போப் வழியாக அப்பிரதி (என் ஆசிரியப் பிரான், ப.85) உ.வே.சாவை வந்துசேர்ந்தது. உ.வே.சா அதைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்துவந்தார். இருவருக்குமான நட்பின் சின்னமாக அப்பிரதி இன்றும் உ.வே.சா நூலகத்தில் இருக்கக்கூடும்.
  • (ஜி.யு.போப் பிறந்த நாள்: 11, பிப்ரவரி. உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள்: 19, பிப்ரவரி)

நன்றி: அருஞ்சொல் (18 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories