TNPSC Thervupettagam

டெங்கு காய்ச்சல்: தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்!

September 27 , 2019 1696 days 961 0
  • பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. 2017-ல் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவிலேயே அதிக உயிர்களைப் பறிகொடுத்த மாநிலம் தமிழ்நாடு.
  • ஆனால், அந்தப் பேரிழப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே சமீபத்திய உயிரிழப்புகள் சொல்கின்றன. இதுவரை நகரில் மூன்று உயிர்களை டெங்கு காய்ச்சலுக்குப் பலிகொடுத்திருக்கிறோம்.
  • டெங்கு பரவும் விதம், அறிகுறிகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என நம்மைத் தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.
டெங்கு எப்படிப் பரவுகிறது?
  • ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் நோய் இது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வலம்வரக்கூடியவை.
  • கொசு கடித்து ஐந்தாறு நாட்களில் காய்சலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும். டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு ஹாமொராஜிக் காய்ச்சல் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன.
  • முதல் வகை ஃப்ளு காய்ச்சல் போன்றது. இரண்டாம் வகைக் காய்ச்சலால் உயிரிழப்புகூட ஏற்படும்.
அறிகுறிகள்:
  • காய்ச்சல், தலைவலி, கண்ணுக்குப் பின்புறம் எடுக்கத் தொடங்கும் வலி போன்றவை முதற்கட்ட அறிகுறிகள்.
  • தசை மற்றும் மூட்டு வலி.
  • பசியின்மை.
  • சுவையை உணர முடியாமல்போதல்.
  • தட்டம்மைபோல மார்பு மற்றும் மூட்டுகள் அருகே சருமப் பிரச்சினைகள் வரக்கூடும்.
  • குமட்டலுடன் கூடிய வாந்தி.
அரசு செய்ய வேண்டியவை:
  • தெரு சுத்தம், கழிவுநீர் அகற்றுதல், கொசு ஒழிப்பு போன்ற பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும்.
  • தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதையும், குப்பை மேலாண்மையையும் பொது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கிவிடுவதன் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.
  • பரவலாக மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பாதுகாப்பான குடிநீருக்கு உறுதி தர வேண்டும்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
  • வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இன விருத்தி செய்கின்றன. எனவே, தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது தலையாய பணி.
  • குப்பைகள், வீணாகும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • கொசு வலை, முழுக்கை-முழுக்கால் சட்டைகள் என்று கொசு கடிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • டெங்குக்கான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதமின்றி மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories