TNPSC Thervupettagam

நாடாளுமன்றம்: அன்றும் இன்றும்!

September 30 , 2021 943 days 519 0
  • அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், முக்கிய பிரமுகா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவலை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினா்கள் அவையை முடக்கினா்.
  • மாநிலங்களவையில் அலுவல்களை ரத்து செய்து போன் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

அன்று நடந்தவை

  • ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுவதாக சோசலிஸ்டுகள் புகார் கூறியதுண்டு.
  • அதன்பின் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், ஸ்தாபன காங்கிரஸ், ஆளும் காங்கிரஸ் என்று காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது, 1969-இல் ஸ்தாபன காங்கிரஸ் தலைவா்கள் காமராஜா், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஹிதேந்திர தேசாய் போன்றவா்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பிரச்னை எழுந்தது.
  • அவசர நிலை காலத்தில், எதிர்க்கட்சி தலைவா்கள், பத்திரிகையாளா்கள், பிரமுகா்கள் ஆகியோருடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
  • ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டே 1988-இல் கா்நாடக மாநில முதலமைச்சராக இருந்தார்.
  • அப்போது, கா்நாடக அரசியல் தலைவா்கள் தேவெகௌடே, வீரப்ப மொய்லி, குண்டு ராவ், எஸ். பங்காரப்பா, தேவராஜ் அா்ஸ் ஆகியோருடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டதாக சா்ச்சை எழுந்தது.
  • அதன் பின்னா், பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவராக இருந்த ஜைல் சிங் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.
  • வி.பி. சிங் பிரதமராக 1990-இல் பொறுப்பேற்றபோது சந்திரசேகா், தன்னுடைய தொலைபேசி மட்டுமல்ல, தன்னோடு வேறு 26 தலைவா்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று குற்றம் சாட்டினார்.

மற்ற ஆட்சி காலத்தில்

  • ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சா்களாக இருந்த கே.சி.பந்த், ஆரிஃப் முகமது கான் (இன்றைய கேரள ஆளுநா்), ஏ.ஆா். அந்துலே, சிமன்பாய் படேல் போன்ற பலரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  • காங்கிரஸ் ஆதரவோடு சந்திரசேகா் பிரதமரானதும் காங்கிரஸ் தலைவா்களுடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.
  • உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் 2006-இல் முதல்வராக இருந்தபோது, சோனியா காந்தி தூண்டுதலால், தனது தொலைபேசியும் தனது உதவியாளா் அமா் சிங் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறினார்.
  • கடந்த 2007-இல் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சித் தலைவா்கள் 20 பேரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.
  • கடந்த 2010-இல் மன்மோகன் சிங் ஆட்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் திக்விஜய் சிங், பிகார் முதலமைச்சா் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் பிரகாஷ் காரத், மத்திய விவசாய அமைச்சராக இருந்த சரத் பவார் ஆகியோருடைய கைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.
  • மன்மோகன் சிங் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த 2011-இல், பா.ஜ.க. தலைவா்கள் சிலா், நிதி அமைச்சா் பிரணாப் முகா்ஜி ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பிரச்னை எழுந்தது.
  • 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீரா ராடியா தொலைபேசி பேச்சுகள் பொதுவெளியில் கசிந்தது நாம் அறிந்ததே.
  • ஜூலை - 19 முதல் 4 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தொடரில், ஜூலை 29 வரையிலான 8 நாட்களில் மக்களவை 14 மணி நேரமும், மாநிலங்களவை 22 மணி நேரமும் மட்டுமே செயல்பட்டன. அதுவும் கூச்சல், குழப்பம், முடக்கங்களுக்கிடையே.
  • ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போஃபா்ஸ் பிரச்னை, போபால் யூனியன் கார்பைடு பிரச்னை 1991-96-இல் நாடாளுமன்றத்தின் 10 சதவிகித நேரத்தை செயல்பட முடியாமல் வீணாக்கியது.
  • எதிர்க்கட்சியினரின் அமளி, 1996-98 ஆண்டுகளில் 5 சதவீத நேரத்தை வீணடித்தது. வாஜ்பாய் ஆட்சியில் 1998-இல் 11 சதவிகித நேரத்தையும், 1999-2004-இல் 18 சதவிகித நேரத்தையும் ஐ.மு.கூ ஆட்சி நடந்த 2004- 2009-இல் 24 சதவிகித நேரத்தையும், 2009-2014-இல் 33 சதவிகித நேரத்தையும் வீணடித்தது.

தகுதியே தடை

  • 2014-19-இல் பா.ஜ.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததால் அந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிய நேரம் 16 சதவீதமாகக் குறைந்தது.
  • 1950-களில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 127 நாட்கள் கூடிய மக்களவை, 2011-இல் 73 நாட்கள்தான் கூடியது. 1951 முதல் 1971 வரை நாடாளுமன்றம் ஆண்டுக்கு 121 நாட்கள் கூட்டப்பட்டது.
  • 1971-இல் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிரதமா் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைக் குறைத்தார். 1971-77-இல் மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 102 நாட்கள்தான் கூட்டப்பட்டது.
  • நிலையற்ற நிலையிலிருந்த ஜனதா ஆட்சி காலத்தில் கூட இது 107 ஆக உயா்ந்தது. மீண்டும் 1980-ல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்து அவா் ஆண்ட 5 ஆண்டுகளில் அது கூட்டப்பட்ட நாட்கள் 93 ஆகக் குறைந்தது. ராஜீவ் காந்தியின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 97 நாளாக உயா்ந்தது.
  • கடந்த 1989-91-இல் மத்தியில் நிலையற்ற ஆட்சி இருந்தபோது அது 55 நாட்களாகக் குறைந்தது. 1991-இல் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மக்களவை ஆண்டுக்கு 85 நாட்கள் கூட்டப்பட்டது.
  • பிறகு நிலையற்ற நிலையிலிருந்து தேவேகௌடா, குஜ்ரால் ஆட்சிக் காலங்களில் அது ஆண்டுக்கு 63 நாட்களே கூட்டப்பட்டது.
  • 1998-2004 வரை 6 ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் மக்களவை இல்லாத 6 மாதங்களை நீக்கினால், அது ஆண்டுக்கு 81 நாட்கள் கூட்டப்பட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டு ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் மக்களவை கூட்டப் படுவது 69 நாட்களாகக் குறைந்தது.
  • மோடி அரசின் முதல் 5 ஆண்டுகளில் மக்களவை கூட்டப்பட்டது 66 நாட்களாகிவிட்டது. எனவே 1950-களுடன் ஒப்பிட்டால் நாடாளுமன்றம் கூட்டப்படுவது 50 சதவிகிதம் குறைந்து விட்டது.
  • இதற்கு என்ன காரணம்? ஒன்று, நாடாளுமன்றத்தின் மாண்புகள் இந்திரா காந்தி காலத்தில் சரிந்தது. அடுத்த காரணம், 1989 முதல் 2014 வரை மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தை முடக்குவது நடந்தது. அவையைக் கூட்டுவதே பிரச்சனையானது.
  • நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்கள் குறைந்தாலும், அது செயல்பட்ட நேரம் அதிகமாகவே இருந்தது. எப்படி? நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களில் அதன் விவாத நேரத்தை நீட்டித்து, மறுநாள் விடியும் வரை கூட பணி செய்து வந்தது.
  • 1962 முதல் 1991 வரை நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களில், அதன் விவாத நேரம் 107 லிருந்து 120 சதவிகிதம் வரை இருந்தது. பிறகுதான், கூட்டப்பட்ட நாட்களில் கூட, அந்த விவாத நேரம் குறைய ஆரம்பித்தது. 1991-96-இல் விவாத நேரம் குறைய ஆரம்பித்தது.
  • வாஜ்பாய் காலத்தில் (1998-2004) கூட்டப்பட்ட நேரத்தில் அமரும் சதவிகிதம் 91 ஆகக் குறைந்து, ஐ.மு.கூ (1)-இல் 87 சதவிகிதமாகி, ஐ.மு.கூ (2)-இல் 63 சதவிகிதமாக மேலும் இறங்கியது.
  • நாடாளுமன்றம், 1957 முதல் 1989 வரை சட்டங்களை இயற்ற சராசரி 25 சதவிகிதம் நேரத்தை வழங்கிய பிறகு நிலையற்ற நிலையிலிருந்த வி.பி.சிங், சந்திரசேகா், தேவேகௌடா, குஜ்ரால் காலத்தில், அதற்கு நாடாளுமன்றம் அளித்த நேரம் 16-17 சதவிகிதமாகக் குறைந்தது.
  • நரசிம்ம ராவ் காலத்தில் அது 22 சதவிகிதமாகவும், வாஜ்பாய் காலத்தில் 25 சதவிகிதமாகவும், ஐ.மு.கூ. (1) ஆட்சிக் காலத்தில் 22 சதவிகிதமாகவும் இருந்தது, ஐ.மு.கூ (2) ஆட்சிகாலத்தில், கூட்டணி பிரச்னைகளால் 13 சதவிகிதமாகக் குறைந்தது. மோடி ஆட்சியின் முதல் 5 ஆண்டுகளில் அது 32 சதவிகிதமாக உயா்ந்தது.
  • சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றம் விவாதத்திற்கு செலவழித்த நேரம் குறைந்தது. ஆனால், இயற்றிய சட்டங்களின் எண்ணிக்கை அதிகமானது.
  • உதாரணமாக, 1971-77 நெருக்கடி காலம் உள்பட 6 ஆண்டு கால இந்திரா காந்தி ஆட்சியில், சட்டம் இயற்றுவதற்குச் செலவழித்த நேரம் 28 சதவிகிதம்.
  • அதில் இயற்றிய சட்டங்கள் 487. அதற்கு முன் 15 ஆண்டுகளில் 25 சதவிகித நேரத்தில் இயற்றிய சட்டங்கள் 221 மட்டுமே.
  • 42-வது அரசியல் திருத்தம் உட்பட இந்திரா காந்தி காலத்தில்தான் குறைவான விவாதத்துடன், அல்லது விவாதமே இல்லாமல், சட்டம் இயற்றும் நடைமுறை தொடங்கியது.
  • ஜனதா ஆட்சிக் காலத்தில் விவாத நேரம் 24 சதவிகிதம், இயற்றிய சட்டம் 135 மட்டுமே. 1980-இல் இந்திரா காந்தி ஆட்சியில் விவாத நேரம் 25 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 336.
  • ராஜீவ் காந்தி காலத்தில் விவாத நேரம் 24 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 355. அரசியல் நிலையற்ற நிலையிலிருந்த ஆட்சி மத்தியில் இருந்த போது, விவாத நேரமும் குறைவு, இயற்றிய சட்டங்களும் குறைவு.
  • வாஜ்பாய் காலத்தில் விவாத நேரம் 22 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 284. ஐ.மு.கூட்டணியின் 10 ஆண்டுகளில் விவாத நேரம் 24 சதவிகிதம்.
  • தற்போதைய அரசு இயற்றிய சட்டங்கள் சராசரியாக 282. முதல் ஐந்து ஆண்டுகளில் விவாத நேரம் 32 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 180.
  • 2009-2014-இல் அத்வானி 96 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார். அவா் பங்கு பெற்ற விவாதங்கள் 39. சுஷ்மா ஸ்வராஜ் 94 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார். அவா் கேட்ட கேள்விகள் 43, பங்கு பெற்ற விவாதங்கள் 105.
  • முலாயம் சிங் யாதவ் 86 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார். அவா் கேட்ட கேள்விகள் 86, பங்கு பெற்ற விவாதங்கள் 113. லாலு பிரசாத் யாதவ் 77 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார், அவா் பங்கு பெற்ற விவாதங்கள் 88.
  • சரத் யாதவ் 83 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார். அவா் கேட்ட கேள்விகள் 42, பங்கு பெற்ற விவாதங்கள் 153.
  • எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நீதிமன்றங்கள் செயல்பட்டாலும் குற்றவாளிகளான எம்.பி, எம்.எல்.ஏ,-க்கள், பெரும்பான்மையோர் தப்பிவிடுகின்றனா்.
  • தோ்தலில் போட்டியிடும்போதும், அவா்களுடைய குற்றப் பின்னணியை சரியாக பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை.
  • தகுதியான, தரமான, நோ்மையான களப் பணியாளா்கள், மக்கள் சிந்தனை உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட்டு இந்த அவைகளுக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் இங்கு தகுதியே தடை.

நன்றி: தினமணி  (30 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories