TNPSC Thervupettagam

மாணவர்களுக்கு தேவை நினைவாற்றல்

February 13 , 2022 812 days 491 0
  • சமீப ஆண்டுகளாக மாணவர்களின் கற்றல் திறனில் மிகப்பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் தொடர் ஊரடங்கு, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, ஆசிரியர்களுடனான தொடர்பு குறைவது, அதீத ஆன்லைன் பயன்பாடு போன்றவற்றால் மாணவர்களின் நினைவு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை அப்படியே விட்டுவிடக் கூடாது. இதை சரி செய்வதற்கென சில எளிய வழிமுறைகள் உள்ளன.
  • இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு நினைவாற்றல் திறன் இல்லை என முடிவு செய்துவிடுகிறார்கள். நன்றாகத்தான் படித்தேன் ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தேர்வு எழுதும் போது பதில்கள் மறந்துவிடுகின்றன. அதனால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்று எத்தனையோ மாணவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
  • பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தின் கதையை இப்போது கேட்டாலும் சொல்ல முடிகிறது. அதைபோல் ஒரு திரைபடத்தின் பாடல் வரிகளை ஞாபகமாக சொல்லமுடிகிறது என்றால் உங்களுக்கு சிறப்பாக நினைவாற்றல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உங்களுக்கு எதில் ஆர்வமும் விருப்பமும் இருக்கிறதோ அதை பற்றி எப்போது கேட்டாலும் உங்களால் கூற முடியும். திரைப்படத்தின் மேல் உள்ள விருப்பமும் ஆர்வமும் தான் உங்களால் அந்த திரைப்படத்தின் கதையையோ, பாடல் வரிகளையோ உடனே சொல்ல முடிகிறது.
  • அதே போன்று நீங்கள் படிக்கும் படிப்பையும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும், படித்தால் எப்போதுமே மறதி ஏற்படாது. ஒரு நூலகத்துக்கு சென்று அங்கு உள்ள நூலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்கும்போது அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும் நீங்கள் கேட்ட புத்தகத்தை உடனே எடுத்து கொடுத்துவிடுகிறார்.
  • அது எப்படி முடிகிறது என்று பார்த்தால் அங்கே புத்தகங்களை வரிசைப்படுத்தி சீராக அமைத்திருப்பதுதான் காரணம். எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் அதை சீராக வரிசைப்படுத்தி வைத்திருப்பதால் எந்த புத்தகத்தையும் எடுப்பது மிக எளிது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுபோன்றுதான் நமது நினைவுகளை பதிவுகளாக மாற்றி ஒழுங்காக வரிசைப்படுத்தி வைத்தால் அது நீண்டகாலம் வரை நினைவில் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் சிறிது காலத்தில் மறைந்து போய்விடும்.
  • நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் குறைந்த வயதிலேயே சிறப்பான நினைவாற்றல் உள்ளவர்கள் தங்கள் நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • உங்கள் நினைவாற்றல் சிறப்பான முன்னேற்றத்தைக் காண ஓர் எளிய பயிற்சி முறையை நீங்கள் மேற்கொள்ளலாம். காலை சிற்றுண்டி முடித்தவுடன் தூங்கி எழுந்தது முதல் நீங்கள் செய்த செயல்களை வரிசையாக இரண்டு நிமிட நேரம் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் பணியை தொடர வேண்டும்.
  • அதைபோல, காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் செய்த செயல்களை மதிய உணவு நேரத்தில் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அதைபோல மாலையிலிருந்து இரவு உணவு உண்ணும் நேரம் வரை நீங்கள் செய்த செயல்களை தூங்கும் முன் வரிசையாக நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். இந்த நினைவாற்றல் பயிற்சியை ஒருமாத காலம் செய்து வந்தால் உங்கள் நினைவாற்றல் நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.
  • இந்த பயிற்சி முறை உங்கள் நினைவாற்றலை மட்டுமல்லாமல் உங்களது நேர மேலாண்மையையும் அதிகரிக்கும். எப்படியென்றால் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் வரிசைப்படுத்தி நினைவுப்படுத்தும் போது அன்றைய பொழுதில் வீண் அரட்டை, தொலைக்காட்சி, சமுக வலைதளங்கள் போன்றவற்றில் நீங்கள் வீண் அடித்த நேரங்கள் உங்கள் கவனத்திற்கு வரும். அவற்றை நீங்கள் தானாகவே தவிர்த்துவிட இந்த பயிற்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
  • அதே போன்று மொத்தமாக உள்ள பாடத்தை நமக்கு புரியும் வகையில் பகுதி வாரியாக பிரித்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால் நினைவில் அதிக பாரமில்லாமல் பதிந்துகொள்ள முடியும். அத்துடன் பகுதி பகுதியாக பிரித்து வைத்து சிறு பகுதியாக படிப்பதால் மறதி இல்லாமல் அனைத்தையும் தேர்வில் எழுத முடியும்.
  • மற்றொரு பயிற்சி முறை என்னவென்றால் படிக்க வேண்டிய பதிலை இரண்டு தடவை படிக்க வேண்டும். இப்போது புத்தகத்தை மூடி வைத்து விட்டு நாம் படித்த பாடத்தை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். அந்த பாடம் மேலோட்டமாக சொல்லும் கருத்து என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மீண்டும் இரண்டு முறை படிக்க வேண்டும். நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வதால் படித்த பாடம் மனதில் பதியும். அதோடு படித்ததை நண்பர்களிடம் பகிர்வது மிகவும் சிறந்த நினைவாற்றல் பயிற்சி ஆகும். இதனால் நினைவில் உள்ளது வாய்மொழியாக வெளிப்படும் போது ஐந்து முறை படித்ததற்கு சமமாகிறது. பாடங்கள் படிக்கும்போது புரியாத வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ வந்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிந்த வார்த்தை அல்லது வாக்கியங்களுடன் தொடர்படுத்தி படித்தால் புரியாத வாக்கியங்களும் நினைவில் பதியும்.
  • மொத்தத்தில் தேர்வு எழுதும்போது மறதி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நினைவாற்றல் பயிற்சிகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நினைவாற்றல் என்பது படிப்படியாக அதிகரிக்கும். அதோடு படிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும்.
  • அப்படி புரிந்து படிக்கும் முறையை எளிய முறையாக நாம் நமது தாய்மொழியில் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி படிக்கும் பாடங்கள் எப்போதும் மறக்காமல் நமது நினைவில் சரியாக பதிந்து நம் வாழ்வில் முழுமையாக பயன்படும் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். இதுவே மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் நினைவாற்றலை அதிகரிக்க உந்து சக்தியாக விளங்கும்.

நன்றி: தினமணி (13 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories