TNPSC Thervupettagam

வரலாற்றில் துலங்கும் காரைக்கால் அம்மை

October 8 , 2023 224 days 186 0
  • ‘புனிதவதி’ எனும் பெயர் கொண்ட வரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமையை அறிவதில்லை. புனிதவதி, வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப் பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டிப் பல முதல்களின் சொந்தக்காரர்.
  • சிவபெருமானைப் போற்றி முதன் முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக் கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.
  • சுந்தரர் கண்ட காரைக்கால் அம்மை: பெருமைகள் சூழ உயர்ந் தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச் சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறை யடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத் தொண்டத்தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்தஅறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.
  • திருத்தொண்டத்தொகையை உள்வாங்கிநம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப் பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத் தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்ததாகச் சொல்கிறது.
  • சிவபெருமானால் அம்மைஎன்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம்கோயில் விமானம் சிற்பச்செதுக்கலாய்ப் பதிவு செய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதி யொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.
  • அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான்,பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையானவரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்துகொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால்இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்க முடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

சிவனுடன் அம்மை

  • பேய், காரைக்கால்குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம்10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்தஇவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.
  • மாதேவியின் சாதனைகளின் சிகரமாய்,முற்சோழர்களின் தொடக்கக் காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில்ஆனந்தத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணி செய்தகோயில்களில் மண்டபக் கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக் கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக்குக் கீழோ, அருகிலோ காரைக்கால்அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலை யிலோ, ஆடலைப் போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்தத்தாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடு இணையற்ற சிற்பப் பதிவாகும்.

செம்பியான் மாதேவியின் சிற்பக் காட்சி

  • செம்பியன்மாதேவி அடையாளப்படுத்து வதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரி ராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது.
  • அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்தசெம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத்தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர். சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பியன் மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக் காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறை வனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டே சுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.
  • வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில் களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டு கிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்பு படுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories