ஆறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE – All India Council for Technical Education) லீலாவதி விருதுகள் 2020 வழங்கப் பட்டு உள்ளது.
இது 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இந்த விருதிற்கு, 12 ஆம் நூற்றாண்டின் “லீலாவதி” என்ற புத்தகத்தின் பெயரிடப் பட்டு உள்ளது.
இந்தப் புத்தகத்தைக் கணிதவியலாளர் இரண்டாம் பாஸ்கரா என்பவர் எழுதி உள்ளார்.
லீலாவதி என்பவர் இந்தியக் கணிதவியலாளர் இரண்டாம் பாஸ்கராவின் மகளாவார்.
வெற்றியாளர்கள்
'மகளிர் தொழில்முனைவோர்' எனும் துணை கருப்பொருளில் தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த SWEAT அமைப்பானது (Sona Women Entrepreneurship and Training) வென்றுள்ளது.
இரண்டாம் இடமானது, 'டிஜிட்டல் கல்வியறிவு' எனும் துணைக் கருப்பொருளின் கீழ் பாரதிய வித்யா பீடத்துக்கு வழங்கப்பட்டது.
புனேவின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமானது 'கல்வியறிவு' என்ற துணை கருப்பொருளின் கீழ் விருதை வென்றது.
மேலும், மகாராஷ்டிராவின் வால்சந்த் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த WIT என்ற மகளிர் சுகாதாரக் கூட்டணியானது 'மகளிர் உடல்நலம்' எனும் துணை கருப்பொருளின் கீழ் விருதை வென்றது.
இவர்களைத் தவிர, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ரேடியன்ட் சீதா அவர்கள் 'சட்ட விழிப்புணர்வு' எனும் பிரிவில் விருதை வென்று உள்ளார், அதே சமயம் தமிழ்நாட்டின் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த செல்வி பரித்ரானா, 'தற்காப்பு' பிரிவில் விருதை வென்று உள்ளார்.