பள்ளிக் கல்வி முறை குறித்த நிதி ஆயோக் அறிக்கை (2014-15 - 2024-25 வரை)
May 16 , 2026 16 days 80 0
நிதி ஆயோக், ‘இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை: காலப்போக்கு பகுப்பாய்வு மற்றும் தர மேம்பாட்டிற்கான கொள்கை வரைபடம்’ என்ற தலைப்பில் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டது.
இது, அணுகல் மற்றும் சேர்க்கை, உள்கட்டமைப்பு, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம், மற்றும் கற்றல் விளைவுகள் போன்ற முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் ஒரு விரிவான, பத்தாண்டு காலப் பகுப்பாய்வை முன்வைக்கும் ஒரு கொள்கை ஆவணமாகும்.
இது UDISE+ 2024-25, PARAKH Rashtriya Sarvekshan 2024, NAS 2017 மற்றும் 2021, மற்றும் ASER 2024 ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை இன்று 14.71 லட்சம் பள்ளிகளைக் கொண்டுள்ளதுடன், இது 24.69 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்குச் சேவை செய்கிறது என்ற நிலையில் இது உலகின் மிகப்பெரிய கல்வி முறையாகும்.
சுமார் 7.3 லட்சம் தொடக்கப் பள்ளிகள் இருக்கும் நிலையில், சுமார் 1.64 லட்சம் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளன.
கல்வி அமைப்பில் சேரும் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் நான்கு பேர் மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.
இதன் பொருள், வெறும் 5.4% பள்ளிகள் மட்டுமே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான கல்வியை வழங்குகின்றன.
நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் (3,812) மற்றும் தெலங்கானாவில் (2,245) இதில் அதிகபட்ச எண்ணிக்கைகள் காணப்பட்டன.
மாணவர் இடைநிற்றல் என்ற "கசிவுப் பாதையை" சரி செய்ய, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளிகளை உருவாக்கும் 'சுழற்சிப் பள்ளி முறையை' இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
UDISE+ 2024-25 திட்டத்தின்படி, 1.19 லட்சம் பள்ளிகளில் செயல்படும் மின்சார வசதி இல்லை என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
நீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகலும் சீரற்றதாக உள்ளது.
குடிநீர் வசதி கொண்ட பள்ளிகளின் பங்கு 2014-ல் 96.5%-லிருந்து 2025-ல் 99%-ஆக அதிகரித்துள்ளது இருப்பினும், 14,505 பள்ளிகளில் இன்னும் செயல்படும் நீர் ஆதாரங்கள் இல்லை என்பதோடு மேலும் கிட்டத்தட்ட 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லாததால், மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துதல் ஆகியவை பள்ளிக் கல்வி அமைப்பில் எதிர்கொள்ளப் பட வேண்டிய சவால்களாகும்.
கல்வி உரிமைச் சட்டம் 14 வயதில் முடிவடைவதால், மூத்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குடும்பங்களே ஏற்க வேண்டியுள்ளது என்ற உண்மையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கல்விக்காக இந்தியாவில் தற்போது ஒதுக்கப்படும் 4.6% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது, 1964-ல் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட 6% என்ற இலக்கை விடக் குறைவாகவே உள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.