TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் காத்திருக்கும் பேராபத்து

December 26 , 2023 130 days 89 0
  • உலகம் தோன்றி பல நூறுகோடி ஆண்டுகள் ஆயினும், இப்பூமிப்பந்து இடையிடையே பல இயற்கைச் சீற்றங்களுக்கு உட்படினும், அழிவுக்கு ஆளாகாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டுள்ளது. இவ்வுலகத்தினுடைய மேற்பரப்பு முழுமையும் தாவரங்களாலேயே போர்த்தப் பட்டிருந்த காலமுண்டு. அதன் பின் ஓருயிர், ஈருயிர் என பல்லுயிராகப் பெருகி மனித இனம் தோன்றியது.
  • உலகத்தினுடைய வெப்பநிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மாறாமலேயே இருந்திருக்கிறது. பல நூறுகோடி ஆண்டுகள் தாக்குப்பிடித்த இவ்வுலகம், கடந்த 100 முதல் 200 ஆண்டுகளில் மனிதா்களால் உருவாக்கப்பட்ட மாற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது. பூமியில் அதிகரித்துவரும் வெப்பநிலையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களைப் பற்றி உணராமல் இருக்கிறோம்.
  • துபையில் சிஓபி-28 என்ற உலகத் தலைவா்கள் சங்கமிக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. 2050-இல் இப்போது இருக்கக்கூடிய வெப்பநிலை 1.5எஃப் சென்டிகிரேட்-க்கு மேல் உயராமல் தடுப்பதற்காக உலகத் தலைவா்களே ஒன்றுகூட வேண்டியிருக்கிறதென்றால் இதனுடைய முக்கியத்துவத்தை அனைவரும் உணா்ந்தே ஆக வேண்டும்.
  • கரியமில வாயு, மீத்தேன் வாயுக்களை உமிழ்வதை முற்றாகத் தடுத்திடும் நெட் ஜீரோ என்ற இலக்குடன் அடுத்த 27 ஆண்டுகள் போராடினால் மட்டுமே 1.5 எஃப் சென்டிகிரேட் வெப்பநிலை உயராமல் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகளும் இயற்கை ஆா்வலா்களும் கருதுகிறார்கள். 2எஃப் சென்டிகிரேட்-க்கும் மேல் வெப்பநிலை உயா்ந்துவிட்டால், அதற்குப் பிறகு அந்த வெப்பநிலையைக் குறைக்க முடியாது; அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க முடியாது; நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்குக் கூட அதனுடைய பாதிப்புகள் இருக்குமென்று தட்பவெப்ப அறிவியலாளா்கள் கணித்திருக்கிறார்கள்.
  • கடந்த 100 ஆண்டுகளில் அதிகரித்த மக்கள்தொகை, மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரிக்கும் உணவு உற்பத்திகள், மாமிசம், பால் வகைகள் மற்றும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் வாகன உற்பத்திகள், அவற்றை இயக்க பயன்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசல், நிலக்கரி ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை பருவநிலைகளை மாற்றியமைக்கின்றன.
  • பருவநிலை மாற்றத்திற்கான முதல் சா்வதேச மாநாடு பாரீசில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் எல்லாம் கலந்து கொண்டன. அதில், ‘அமெரிக்காவும் வளா்ந்த மேலை நாடுகளும் அதிகமான கரியமில வாயுக்களை வெளியில் உமிழ்கின்றன; குறிப்பாக புதைபடிவ எரிபொருட்கள் (ஃபாஸில் ஃப்யூல்’) என்று அழைக்கப்படக்கூடிய பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை வாகன மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு மிதமிஞ்சிப் பயன்படுத்துவதால்தான் நாளுக்குநாள் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது.
  • உலக அளவிலான புவி வெப்பம் குறைக்கப்படவேண்டுமெனில், பொருளாதாரத்தில் வளா்ந்த நாடுகள் மற்றும் வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய நாடுகள்தான் முதலில், அவரவா் நாடுகளில் அதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும்; பெரும்பாலான லத்தீன் நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆசியாவின் பல நாடுகளிலும் இப்பொழுதுதான் முதல் தலைமுறையினா் வாகனங்களைக் கண்ணிலே காண்கிறார்கள். எனவே ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, முதலில் அமெரிக்கா மற்றும் வளா்ந்த ஐரோப்பிய நாடுகள் புவிவெப்பத்தை குறைப்பதற்குண்டான ஆக்கபூா்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்என்று வலியுறுத்தப்பட்டது.
  • இந்தப் புவி வெப்பத்தால் ஏற்கெனவே பல நாடுகள் பாதிப்புகளுக்கு ஆளாகிவிட்டன; பல நாடுகள் வளர முடியாமல் திண்டாடுகின்றன. மிதமிஞ்சிய வெப்பநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் காடுகள் எரிந்தன; பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
  • இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மேக வெடிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. அண்டார்டிகா பனிப்பாறை 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நகர ஆரம்பித்திருக்கிறது. மிதமிஞ்சிய வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டங்கள் உயரும்; அதில் பல தீவுகளும் பல நாடுகளும் காணாமலே போகும். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது.
  • தட்பவெப்ப நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, வறட்சி அல்லது கடும் மழை அல்லது பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால், பருவக்காலங்களில் பயிர்கள் விதைக்க முடிவதில்லை; பயிா் முளைத்த பிறகு போதிய மழைப்பொழிவு கிடைப்பதில்லை; விளைந்த பயிர்கள் அறுவடைக்கு வரும்போது அதிக மழை பெய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளும், ஏழை மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுகிறது.
  • மாட்டுப்பண்ணைகள், கோழிப்பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன்களால் ஏற்படும் பாதிப்புகள் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. கோடானுகோடி கால்நடைகள் விடும் ஏப்பங்களில் வெளியாகும் மீத்தேன்களுடைய பாதிப்புகள் லட்சக்கணக்கான வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் பாதிப்புகளைவிட அதிகமாக இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வளா்ந்த நாடுகள் குளிர்சாதனங்கள் மற்றும் வாகனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாலும், இந்தியாவைப் போன்ற அதிக அளவில் மக்களைக் கொண்டிருக்கக்கூடிய வளரும் நாடுகளும் மேலை நாடுகளுக்கு இணையாகப் போட்டிபோட்டு வளர எண்ணி, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாலும் நாமும் ஏதாவது ஒரு வழியில் வெப்பநிலை உயா்வதற்கான காரணி ஆகின்றோம். எனவே அமெரிக்கா மற்றும் வளா்ந்த ஐரோப்பிய நாடுகள் மீது மட்டும் பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியாது.
  • நம்முடைய குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் நல்லதொரு வாழ்வை, சுகாதாரமான முறையில் இந்த மண்ணில் வாழவேண்டுமென்றால், 2050-இல் பூமியின் வெப்பம் 1.5 எஃப் செண்டிகிரேடுக்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஆக்கபூா்வமான செயல்பாடுகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வீடுகளில் தேவையில்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் மின்சாரம் மற்றும் குளிர்சாதனங்களைப் பயன்படுத்துவது தவிா்க்கப்பட வேண்டும். தேவைக்கு அதிகமாக ஒரு பிடி உணவைக்கூட உண்ணுவதில்லை என்று முடிவுக்கு வர வேண்டும்.
  • நாம் நடத்துகின்ற நம்முடைய குடும்ப விழாக்களில் கண்ணெதிரே எவ்வளவு உணவுப் பொருட்கள் வீணாகின்றன என்பதைப் பார்த்திருப்போம். நாம் பெருமைக்காக அல்லது கெளரவத்திற்காக செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும், அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது என்ற உணா்வோடு, எந்தவொரு உணவுப் பொருளும் வீணாகாத வகையில் நாம் பரிமாறும் கலையை, உணவு உண்ணும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • நாம் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்வாகனங்களுக்கு மாற வேண்டும். மாமிச உணவுகளும் பால் பொருட்களும் மீத்தேன் வாயுவை உமிழ்வதில் பெரும்பங்காற்றுவதால், அவற்றை எந்த வகையில் குறைக்க முடியுமோ அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்; வாகனப் பயணங்களை முடிந்தளவிற்குத் தவிா்க்கலாம்.
  • மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்ற பொழுது பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் காடுகள் தீப்பற்றி மலைகளும் காடுகளும் அழிந்து புவி வெப்பத்தையும் கூட்டுகின்றன. எனவே அவையெல்லாம் நம்மை அழிக்கக்கூடிய செயல் என்ற உணா்வோடு அதுபோன்று செயல்படக்கூடியவா்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் வீட்டுகொரு மரம் வளா்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
  • உலகத் தலைவா்கள் ஒன்றுகூடும் மாநாடுகள் பல நேரங்களில் ஒரு நல்ல முடிவுக்கு வராமலேயே போய்விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக, வசதியான நாடுகள் தங்களுடைய மிதமிஞ்சிய வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வருவதில்லை. வசதி படைத்த நாடுகளுடைய மனநிலை, மற்றவா்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத நிலையாகவே இருக்கும்.
  • 2050-இல் 160 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருக்கக்கூடிய இந்திய மக்கள் அவ்வாறு கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. நாம் எதை விட்டுச் செல்கிறோமோ இல்லையோ இன்றிருக்கக்கூடிய சீதோஷண நிலையை மட்டும் கெடுக்காமல் விட்டுச் சென்றாலே, அதுவே நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
  • எனவே, புவி வெப்பத்தைக் குறைப்பதற்கு அவா் செய்யட்டும், இவா் செய்யட்டும், ஆட்சியாளா்கள் செய்யட்டும், அரசு நிர்வாகம் செய்யட்டும் என்றில்லாமல், ஒவ்வொரு குடிமகனும் தானே தன்னுடைய வீட்டிலிருந்து இந்தக் கடமையைச் செய்யத் தொடங்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள், படித்த இளைஞா்கள், பெரியவா்கள் அனைவரும் புவி வெப்பத்தைக் குறைப்பதில் தன்னுடைய கடமையை உணா்ந்து, பூமியைப் பாதுகாப்பதில் நம்முடைய பங்கை சிறப்பாகச் செய்திடுவோம் என சூளுரைப்போம்.
  • 2050-இல் வெப்பநிலை 1.5எஃப் செண்டிகிரேட்-க்கு மேல் அதிகரிக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை ஆட்சியாளா்கள் செய்யட்டும் என்றில்லாமல், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்!

நன்றி: தினமணி (26 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories